இதன் பொருள் : "விளைந்த நெல்லையறுத்து யானைக்குக் கவளங் கொடுத்தால், ஒருமாவிற்குக் குறைந்த நிலமும் பல நாளைக்கு வரும். நூறு செய் அளவு நன்செயானாலும் யானை தானே தின்னும்படி விட்டுவிட்டால்,அதன் வாய்க்குள் புகுவதைவிட அதிகம் அதன் கால்பட்டுச் சேதமாகும். அறிவுடைய அரசன் நல்ல வழியில் வரிதண்டினால், அவன் நாடு கோடிப் பொருளைத் தொகுத்துக் கொடுத்துத் தானும் மிகத் தழைக்கும். அவன் அறிவு கெட்டு நாள்தோறும் தகுதியறியாத வீண் ஆரவாரக் கூட்டத்தோடு கூடி, வலிந்து கவரும் பெரும் பொருள்திரளை விரும்பினால், யானை புகுந்த நன்செய் போலத் தானும் உண்ணான்; நாடும் கெடும்" என்பது. சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றியிருந்த காலத்தில் கோட்டை வாயிலை அடைத்துக்கொண்டு உள்ளே சும்மாவிருந்த நெடுங்கிள்ளியை நோக்கிக் கோவூர்கிழார், "கரிய பெண்யானைக் கூட்டத்தோடு பெரிய குளத்திற் போய்ப் படியாமலும், நெற்கவளத்தோடு நெய்ம்மிதிக் கவளமும் பெறாமலும், திருந்திய பக்கத்தையுடைய வலிய கம்பம் கெடச் சாய்த்து நிலத்தின் மேற் புரளும் கையை யுடையனவாய், வெப்பமாக மூச்சுவிட்டு வருந்தும் யானை இடியோசை போல முழங்கவும், பாலில்லாத குழவி அழவும், பெண்டிர் பூவில்லாத வெறுந்தலையை முடிக்கவும், நீரில்லாத அழகிய வேலைப்பாடுள்ள நல்ல மனைகளி லுள்ளவர் வருந்திக் கூக்குரலிடுதல் கேட்கவும், நீ இங்கு இனிதாக இருத்தல் தீயதாகும். கிட்டுதற்கரிய வலிமையுள்ள குதிரையை யுடைய அரசே! நீ அறத்தை மேற்கொண்டால் இதோ நகர் உனதன்றோ என்று சொல்லித் திறந்துவிடு; மறத்தை மேற்கொண்டால் போர் செய்து கொண்டு திறந்துவிடு. இவ் விரண்டுமன்றி, உறுதியான நிலையொடு கூடிய கதவினையுடைய மதிலுக்குள் ஒரு பக்கத்தில் ஒடுங்கிக் கிடத்தல், ஆராயுங் காலத்து, வெட்கப்படத்தக்க செய்தியாகும்" என்று அஞ்சாது இடித்துரைத்தார். (புறம்.44). சோழன் நலங்கிள்ளி இன்னொரு சமையம் உறையூரை முற்றுகை செய்திருந்தபோதும், நெடுங்கிள்ளி கோட்டைவாயிலை அடைத்து உள்ளேயிருந்தான். அன்றும் கோவூர்கிழார் தலையிட்டு அவ் விருவர் செயலும் அவர் குடிக்குப் பொருந்தாமையைக் காட்டிப் போரை நிறுத்தினார். கோப்பெருஞ்சோழன் தன்னொடு மாறுபட்ட தன் மக்கள் மேற் போருக்குச் சென்றபோது, புல்லாற்றூர் எயிற்றியனார் அதன் இழிவையும் பயனின்மையையும் எடுத்துக் காட்டித் தடுத்து, அவனை நல்வழிப்படுத்தினார். (புறம். 213). |