பின்னிணைப்பு-1 மந்திரம் என்னும் சொல் வரலாறு தென்சொல்லா வடசொல்லா என்னும் ஐயுறவிற் கிடமான தென்சொற்களுள் மந்திரம் என்பதும் ஒன்றாகும். அது வட மொழியில் வழங்குவதாலும், அது வடசொல்லேயென ஆரியர் வலிப்பதாலும், பொலிவொலி யுற்றிருப்பதனாலும், வாய்மொழி யென்னும் (எள்ளளவும் ஐயுறவிற் கிடந்தராத) வேறொரு தென்சொல்லுண்மையாலும், தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியரும் தமிழ் வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியு மின்மையால் அது வட சொல்லேயென மயங்குகின்றனர். வடமொழியி லுள்ளவையெல்லாம் வடசொல் அல்லவென் றும், வடசொற்களுட் குறைந்த பக்கம் ஐந்திலிரு பகுதி தென்சொல் என்றும், முன்னரே கூறப்பட்டது. தமிழில் தனிப்பட்ட பொலி வொலி அல்லது எடுப்பொலி யின்றேனும், மெலிவலி யிணைந்து வரின் பொலிவொலியாம் என்னும் உண்மையை, தங்கம், நெஞ்சம், பண்டம். முந்திரி, பம்பரம், குன்றம் என்னும் தூய தென்சொற்களை ஒலித்துக் காண்க. (தமிழ் ஒப்புயர்வற்ற முதுபழந் தொன்மொழி யென்பது மட்டுமன்றி, மாபெருஞ் சொல்வள மொழி யென்பதும், கருத்தில் இருத்துதல் வேண்டும். அதன் சொல்வளத்தை விளக்குதற்கு, தமிழ் தனக்கேயுரிய வீடு என்னும் சொல்லோடு, தெலுங்கிற்குரிய இல்(லு) என்னும் சொல்லையும், கன்னடத்திற்குரிய மனையென்னும் சொல்லையும், வடமொழிக்கும் பின்னிய மொழிகட்கும் உரிய குடி என்னும் சொல்லையும், தன்னகத்துக் கொண்டுள்ளதென்று கால்டுவெலார் எடுத்துக் காட்டியதையும், நோக்குதல் வேண்டும்.) ஈ,தா, கொடு என்னும் ஒருபொருட் சொற்களுள், ஈ என்னும் சொல்லைத் தெலுங்கு கொண்டுள்ளது போன்றே, தா என்னும் சொல்லை ஆரிய மொழிகளெல்லாம் கொண்டுள்ளன. இங்ஙனம் தாய்மொழிக்குரிய ஒருபொருட் சொற்களுள், ஒவ்வொன்றைக் கிளைமொழிகள் கொண்டு வழங்குவது கிளைமொழித் தெரிப்பு (Dialectic Selection) எனப்படும். இது தாய்வீட்டிலுள்ள ஒருவகைப் பல்வேறு கலங்களுள் ஒவ்வொன்றை 7மகளிர் எடுத்துக்கொள்வது போன்றது. ஆகவே, வாய்மொழி என்னும் வேறொரு சொல் லுண்மையால் மந்திரம் என்பது வடசொல்லாகி விடாது. |