| வடமொழியில், தத் கச்சதி என்பது அவன் போகிறான், அவள் போகிறாள், அது போகிறது, என்று பொருள்படுவது போன்ற சொற்றொடரமைப்பு தமிழில் இல்லை. புலமக்கள் அமைப்பு உரைநடை, செய்யுள் என மொழிநடை இருவகைப் படும். இவற்றுள் செய்யுள் புலமக்கள் அமைப்பாகும். அது பாட்டும் பாவும் என இரு வகையாம். உரைநடை பண்பட்டு இசைப் பாட்டாகவும், இசைப்பாட்டு பண்பட்டுச் செய்யுளாகவும் திருந்தும். ஆகவே, செய்யுளே மொழியின் உச்ச நிலையாம். குமரிக்கண்டத் தமிழர், செய்யுட் கலையின் கொடுமுடி யேறி, அறுவகை வெண்பாக்களையும், நால்வகை அகவற்பாக்களையும், நாலும் ஐந்தும் ஆறுமான உறுப்புகளையுடைய நால்வகைக் கலிப்பாக்களையும், இருவகை வஞ்சிப்பாக்களையும், யாத்திருந்தனர். யாத்தல் = கட்டுதல். வெண்பாவும் கலிப்பாவும் போன்ற செய்யுள் வகைகளை, வேறெம்மொழியிலும் காண்டலரிது. எ-டு : வெண்பா "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னேரிலாத தமிழ்" கலிப்பா (தரவு) "அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியும் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎளினி; (தாழிசை) 1 அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே; |