பக்கம் எண் :

36பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

கூட்டு (வெந்தாணம்), துவட்டல், புரட்டல், பொரியல், வறுவல், புளிக்கறி, பச்சடி (ஆணம்), அப்பளம், துவையல், ஊறுகாய், வற்றல், உழுந்து வடை, காரவடை, தேங்குழல், முக்கனிகளுள் ஒன்று என்பன.

   கும்மாயம் குழைய வெந்த பருப்பு, அல்லது பயறு. வெந் தாணம் (வெந்த ஆணம்) என்பது இன்று வெஞ்சணம் என மருவி வழங்குகின்றது. இதை வடமொழியாளர் கடன்கொண்டு வ்யஞ்சன என்று திரித்தும், வ்ய+அஞ்சன என்று பிரித்தும், உத்திக்குப் பொருந் தாத பொருள் கூறியும், வடசொல்லாகக் காட்டுவர்.

   திண்மை நிலைபற்றி நீர், சாறு, தீயல், இளங்குழம்பு, குழம்பு, கூட்டு எனக் குழம்பு பலவகைப்படும், சோறும், சருக்கரைப் பொங்கல் (அக்காரடலை, அக்கார வடிசில்), வெண்பொங்கல், மிளகுபொங்கல், நெய்ப்பொங்கல், தேங்காய்ச் சோறு, பாற் பொங்கல், கடும்புச் சோறு, ஊன்சோறு (புலவு), ஊன்றுவையடிசில் எனப் பலவகைப்படும்.

   ஊன்சோறு அல்லது புலவு பண்டைக் காலத்தில் தமிழகத் திலேயே தோன்றிப் பின்பு வழக்கற்றது; முகம்மதியர் வந்தபின் அவரிடமிருந்து புதிதாய்க் கற்றுக்கொண்டதன்று.


"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
 அட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
 பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி"
(புறம். 113)

என்றும்,

" புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
 மலரா மாலைப் பந்துகண் டன்ன
 ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
 செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை"
(புறம். 33)

என்றும், வரும் புறப்பாட்டடிகளைக் காண்க.

"அமிழ்தன மரபின் ஊன்றுவை யடிசில்" (புறம்.360:17)

என்பது, புலவின் சிறப்பு வகையாகத் தோன்றுகின்றது.

   இறைச்சி வகைகளுள் உடும்பிறைச்சியைத் தலைசிறந்ததாகத் தமிழர் கொண்டமை, "முழுவுடும்பு, முக்காற்காடை, அரைக்கோழி, காலாடு" என்னும் பழமொழியால் தெரிய வருகின்றது.

"உடும்பிழு தறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
 சீறின் முன்றில் கூறுசெய் திடுமார்
 கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
 மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து"
(புறம். 325: 7-10)

என்னும் புறப்பாட்டடிகளும்,