பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்37

"நாய்கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு" (பழ. 35)

என்னும் பழமொழி நானூற்றடியும், இதை வலியுறுத்தும்.

   சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கையைப் பிடித்து, "உம் கை மெல்லிதாயிருக்கிறதே! கரணியம் என்ன?" என்று வினவியதற்கு, அவர்,

"புலவு நாற்றத்த பைந்தடி
 பூநாற் றத்த புகைகொளீஇ ஊன்றுவை
 கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
 பிறிதுதொழி லறியா வாகலின் நன்றும்
 மெல்லிய பெரும தாமே......
 ..................................
 செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே."
(புறம்.14:12-19)

என்று கூறிய விடையால், கடைக்கழகக் காலத்துப் பிராமணனும் ஊனுண்டமை அறியப்படும்.

"நெய்கனி குறும்பூழ் காய மாக
 ஆர்பதம் பெறுக தோழி யத்தை
 பெருங்கல் நாடன் வரைந்தென அவனெதிர்
 நன்றே மகனே யென்றனன்
 நன்றோ போலும் என்றுரைத் தோனே"
(குறுந்.389)

என்பதில், நெய்யிற் பொரித்த குறும்பூழ்க்கறி கூறப்பட்டது.

   குறும்பூழ் வேட்டுவன் 214ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட் டான். குறும்பூம் = காடை. மனைக்கோழி 395ஆம் புறப்பாட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. ஆட்டில் வெள்ளாட்டுக் கடாவையே பண்டைத்தமிழர் சுவையுள்ளதென விரும்பியுண்டனர்.

"மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப" (புறம். 33)
"மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்" (புறம். 113)
"நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின்" (புறம். 262)
"மைவிடை யிரும்போத்துச் செந்தீச் சேர்த்தி" (புறம். 365)
"விடைவீழ்த்துச் சூடுகிழிப்ப" (புறம். 366)
"மரந்தோறும் மைவீழ்ப்ப" (மதுரைக். 754)
"மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண்.143)
"செங்கண் மழவிடை கெண்டி" (பெரும்பொருள் விளக்கம்)

மை = காராடு, வெள்ளாடு. விடை = கடா, வெள்ளாட்டுக் கடா.