"சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி சளிசகடு சட்டை சவளி - சவிசரடு சந்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும் வந்தனவாற் சம்முதலும் வை" என்னும் மயிலைநாதர் எடுத்துக்காட்டுச் செய்யுளால், சவளி என்பது தூய தென்சொல்லாதல் அறியப்படும். அக்காலத்து மெல்லாடை, பாம்புச் சட்டை போன்றும், மூங்கிலின் உட்புற மீந்தோல் போன்றும், புகை விரிந்தாற்போன்றும், நீராவி படர்ந்தாற்போன்றும், இழையோடியது தெரியாமலும், பூத் தொழிலுடன் நுண்ணிதாய் நெய்யப்பட்டிருந்ததென்று பண்டைத் தமிழ்நூல்கள் கூறுகின்றன. "நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து அரவுரி யன்ன அறுவை" (பொருந.82-3) "பாம்புரி யன்ன வடிவிள காம்பின ் கழைபடு சொலியின் இழையணி வாரா ஒண்பூங் கலிங்கம்" (புறம். 383: 9:11) "காம்புசொலித் தன்ன அறுவை" (சிறுபாண்.236) "புகைவிரிந் தன்ன பொங்குதுகில்" "ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்" (பெரும்பாண்.469) "கண்ணுழை கல்லா நுண்ணூற் கைவினை வண்ண அறுவையர்" (மணிமே.28:52:3) "இழைமருங் கறியா நுழைநூற் கலிங்கம்" (மலைபடு.561) "நீலக் கச்சைப் பூவா ராடை" (புறம்.274) "போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன அகன்றுமடி கலிங்கம்" (புறம்.393) "திருமல ரன்ன புதுமடிக் கொளீஇ" (புறம்.390) இக்காலக் காஞ்சிபுரப் பட்டுச்சேலை போன்றே, அக்காலப் பட்டாடையும் முன்றானை யோரத்தில் அழகிய மணிபோன்ற நூன் முடிச்சுகளை யுடையதாயிருந்தது. "கொட்டைக் கரைய பட்டுடை நல்கி" (பொருந.155) அக்காலத்தில், உயர்குடி ஆடவர் வேட்டியும் மேலாடையும், உயர்குடிப் பெண்டிர் சேலையும் கச்சும் (இரவுக்கையும்), அணிந் திருந்தனர். தாழ் |