பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்45

குடி யாடவர் வேட்டியொடு தலைமுண்டும், தாழ் குடிப் பெண்டிர் கச்சின்றிச் சேலை முன்றானையாலமைந்த மார் யாப்பும், கொண்டிருந்தனர். ஊராட்சித் தலைவரும் பெரியோரும் மேலாடையொடு வட்டத் தலைப்பாகையும் அணிந்திருந்தனர்.

   அரசர்க்கும் அரசியல் அதிகாரிகட்கும் அரண்மனை அலுவ லர்க்குமே, சட்டையணியும் உரிமையிருந்தது. சட்டை உடம்பிற்குப் பை போன்றிருப்பதால், மெய்ப்பை என்றும் பெயர் பெறும்.

"நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு வியங்குநடைச் செலவிற்
கைக்கோற் கொல்லனை"
(சிலப். 16: 106-8)

"ஈசனுங் கற்றுச் சொல்வோர் பின்வர விகலிற் கூடித்
தேசுடைச் சட்டை சாத்தி"

என்னும் பெரும்பற்றப் புலியூர் நம்பி கூற்றுப் பிற்காலத்த தேனும், சட்டை என்னும் சொல் முற்காலத்தே "கஞ்சுக மாக்கள்" என்னும் சிலப்பதிகாரச் சொற்கு "சட்டையிட்ட பிரதானிகள்" என்று அருஞ் சொல்லுரைகாரர் வரைந்திருத்தல் காண்க. பேடிக் கோலத்தாரும் அரசகுலப் பெண்டிரும், வட்டுடை என்னும் ஒருவகைச் சிறப்புடையை, அரையினின்று முழந்தாளளவாக அக்காலத் தணிந்திருந்தனர். (மணிமே: 3:122; பெருங். 3.4:122).

   வேடர்,அரையினின்று அடித் தொடையளவாக, காழம் என்னும் ஒருவகை யுடையை அணிந்திருந்தமை "காழ மிட்ட குறங்கினன்" என்னும் கம்பர் கூற்றால் (கம்பரா.கங்கைப். 32) தெரிய வருகின்றது. அது சல்லடம்போற் குறுகிய அரைக்காற் சட்டை போலும்!

   வெயிற்காலத்திலும் வறண்ட இடத்திலும் செல்லும் வெளிப் போக்கரும் வழிப்போக்கரும்,இல்லறத்தாராயின் தொடுதோல் என்னும் செருப்பும், துறவியராயின் மிதியடி என்னும் பாதக் குறடும் அணிந்து சென்றனர்.

   சட்டையிட்டும் மேனாட்டார்போற் பாதக்கூடு
(boots) அணிந்தும் காட்டுவழியிற் சென்றதாகப் பெரும்பாணாற்றுப் படையிற் கூறப்படும் வணிகர், வெளிநாட்டார்போல் தெரிகின்றது.

"அடிபுதை யரணம் எய்திப் படம்புக்கு
...........................................
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்"
(பெரும்பாண். 69-76)

   அடிபுதை யரணம் = அடியை மறைக்கின்ற பாதக் காப்பு. படம் = சட்டை.