பக்கம் எண் :

46பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

5. அணி

   பண்டைத் தமிழகத்தில், சிறந்த வகையில் விரும்பிய அளவு அணிகலம் செய்வதற்கேற்ற பொன், வெள்ளி, முத்து, மணி முதலிய கருவிகளும் தேர்ந்த பொற்கொல்லரும், அணிபவரும் இருந்தனர்.

   இக்காலத்தும், உலகில் மிகுதியாய்ப் பொன் கிடைக்குமிடம் ஆத்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவு மாகும். இவை முழுகிப் போன பழந்தமிழகமான குமரிக்கண்டத்தைச் சேர்ந்தவை. ஆதலால் குமரிநாட்டிலும் தமிழர்க்கு ஏராளமாய்ப் பொன் கிடைத்திருக்க வேண்டும்.
குமரிக்கண்டம் முழுகிய பின்பும், கொங்குநாட்டில் மிகுதி யாய்ப் பொன் கிடைத்தது. அது கொங்குப் பொன் எனக் கல்வெட் டிற் சிறப்பாய்க் குறிக்கப்பெற்றுள்ளது. இன்று தங்கச்சுரங்கமுள்ள குவளாலபுரம் (கோலார்) கொங்குநாட்டைச் சோந்ததே. அந் நாட் டில் தோன்றும் காவிரியாறு, பண்டைநாளிற் பொன்மணலைக் கொழித்ததனால் பொன்னியெனப் பெற்றது. கொங்குநாடு பண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியாகும்.

   மதுரையிலிருந்த வெள்ளியம்பலமும் தில்லையிலிருந்த பொன்னம்பலமும், பண்டைத் தமிழகத்தின் வெள்ளி பொன் வளத்தைக் காட்டும்.

   முதற்காலத்தில் ஏராளமாய்ப் பொன் கிடைத்ததனால் பொன் னாலேயே காசடிக்கப்பட்டது. அதனால், காசிற்கு மட்டுமன்றி, தாது (உலோக) வகைகட்கும் பொன் என்பது பொதுப்பெயராயிற்று. வெண்பொன் = வெள்ளி, செம்பொன் = செம்பு, கரும்பொன் = இரும்பு. பொன் = தாது
(metal) . இதனால், தமிழகத்தில் இருப்புக் காலத்திற்கு முன் பொற்காலம் ஒன்று இருந்ததோ என ஐயம் எழுகின்றது.

   கடைக்கழகக் காலப் புலவர் சிலர்க்கு அளிக்கப்பட்ட பொற் பரிசிலே, அக்காலத்துப் பொன்வளத்தைக் காட்டப் போதுமானது.

   காப்பியாற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்மீது பதிற்றுப்பத்தின் 4ஆம் பத்தைப் பாடி, நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதிற் பாகமும் பெற்றார். பொன் என்பது பொற்காசு.

   காக்கைபாடினியார் நச்செள்ளையார், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்மீது பதிற். 6ஆம் பத்தைப் பாடி, அணிகலனுக்கென்று ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றார்.

   கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதன்மீது பதிற்.7ஆம் பத்தைப் பாடி, நூறாயிரம் பொற்காசும் அவன் மலைமீதேறிக் கண்டு கொடுத்த நாடும் பெற்றார்.