பக்கம் எண் :

68பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

எ-டு: ஐயா, ஏஐயா - ஏயா, ஏ ஐயோ - ஏயோ, ஓ ஐயா - ஓயா, வாஐயா - வாயா. ஓயா என்பது பெரும்பாலும் இகழ்ச்சியும் சினமும் பற்றிவரும்.

   மகனை, என் அப்பன் வந்தான் என்பதுபோல் என் ஐயன் வந்தான் என்று முதல் வேற்றுமையிலும், ஐயன் என்னும் சொல் மரபு வழுவமைதியாக வரும்.

   தாழ்த்தப்பட்டவர் முதல் தலையாயார்வரை, தமிழரெல் லாரும். பெரும்பாலும் தந்தையை ஐயா என்றே தொன்றுதொட்டு விளித்து வருகின்றனர்.

   இரங்கல், நோதல், வியத்தல் முதலிய குறிப்புப்பற்றிய இடைச் சொல்லாக, ஐயன் என்னும் தந்தை முறைப்பெயரே பல்வேறு விளிவடிவில் தனித்தும் இரட்டியும் வழங்கி வருகின்றது.

   எ-டு: ஐய, ஐயா, ஐயே, ஐயோ, ஐயவோ - ஐயகோ; ஐயைய, ஐயையோ.

   "தந்தைக்குப் பின் தமையன்" என்னும் நெறி முறைப்படி ஐயன் என்பது அண்ணனையுங் குறிக்கும். எமையன் நுமையன் தமையன் என்று, எம் நும் தம் என்னும் மூவிடம் குறித்த முன்னொட்டுப் பெற்று வழங்கிய அண்ணன் முறைப்பெயர்களுள், இறுதியது மட்டும் இன்று முன்னொட்டுப் பொருளிழந்து வழங்குகின்றது. தமையன் = தம் அண்ணன், அண்ணன்.
எக்குலத்தாராயினும், ஆசிரியரை ஐயர் என்பது மேலை வடார்க்காட்டு மாவட்டத்தார் வழக்கு.

   ஆக்க வழிப்பாற்றல்பற்றி, மக்கள் வகுப்பாருள் சிறந்தாராகக் கருதப்பெறும் முனிவரை, விதந்து ஐயர் என்றல் தமிழ்மரபு. பிங்கல வுரிச்சொற் றொகுதியில், முனிவரைப்பற்றியது ஐயர் தொகுதி என்று பெயர் பெற்றிருத்தல் காண்க.

   துறவியருள், காட்டில் வதியும் முனிவரைப் போன்றே, நாட்டில் வதியும் (திருவெண்காட்டடிகளும் தாயுமான அடிகளும் இராமலிங்க அடிகளும் போன்ற) அடிகளாரும் ஆதனியல் (ஆத்மீக) வளர்ச்சியும் ஆக்க வழிப்பாற்றலும் அருள் வடிவும் பெற்றவராதலின், ஐயர் என்றழைக்கப் பெறுவர்.

"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
(1088)

என்னும் தொல்காப்பிய நூற்பாவின் குறிக்கப்பெற்ற ஐயர் என்பார் இராமலிங்க அடிகள் போலும் அருள்வடிவத் தமிழத் துறவியரே.