வலிமிகும் இடங்கள் - Combination in which the Hard consonants are doubled பின்வருமிடங்களில் வருமொழி முதலில் வரும் வல்லினம் கட்டாயம் மிகும். - 2ஆம் வேற்றுமைக்கும், 4ஆம் வேற்றுமைக்கும் பின்.(இங்கு வேற்றுமை யென்றது வேற் றுமை விரியை)
உ-ம்: பாடத்தைப் படித்தான். ஊருக்குப் போனான். - நிகழ்கால வினையெச்சத்திற்குப் பின் ( After the Infinitive Mood ).
உ-ம். செய்யப் போனான் விரைவாகப் பேசினான்; வலியச் சொன்னான். இங்கு ஆக என்னும் துணை வினை (auxiliary verb ) ஆகு என்னும் பகுதியடியாய்ப் பிறந்த நிகழ்கால வினையெச்சம். - யகரமெய்யீற்று இறந்தகால வினையெச்சங் () கட்குப் பின்.
உ-ம்: போய்ப் படித்தான், ஆய்ப் போயிற்று. விரைவாய்ப் போனான். விரைவாய் என்பதில், ஆய் என்னும் துணைவினை ஆ என்னும் பகுதியடியாய்ப் பிறந்த இறந்தகால வினையெச்சம். - தான, தத்த, தாத்த, தனத்த என்னும் சந்த வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கட்குப் பின்.
தனி நெடிலடுத்த குறிலாய் வருவது தான வாய்பாடு. உ-ம்: ஒடிப்போனான். இரு குறிலுக்கிடையில் வல்லின மெய் வருவது தத்த வாய்பாடு. (தமிழில் ஒரு சொல்லில் வல்லின மெய்க்குப்பின் வரும் எழுத்தெல்லாம் வல்லின உயிர்மெய்யாகவே யிருக்கும்.) உ-ம்: தட்டிச் சொன்னான், விட்டுக்கொடுத்தான். தனிநெடிற்குங் குறிலுக்குமிடையில் வல்லின மெய் வருவது தாத்த வாய்பாடு. உ-ம்: சேர்த்துக்கொள், காத்துக்கொண்டான்,வாழ்த்திக்கொடு, மாற்றிப் பேசு குறிலிணைக்குங் குறிற்கு மிடையில் வல்லினமெய் வருவது தனத்த வாய்பாடு. உ-ம்: எடுத்துச்சொல், வருத்திப்பார் இணை = இரண்டு, சோடு. இங்குக் கூறப்பட்ட வாய்பாட்டுச் சொற்கள் பிற சொற்களோடு கூடி நிற்பினும் வலிமிகும் விதி தவறா. இது அடுத்த விதிக்கும் ஒக்கும். |