பக்கம் எண் :

40மறுப்புரை மாண்பு

-40-

 

5. சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

 

     4. முரஞ்சியூர் முடிநாகராயர் செய்யுளில் ''ஐவர்'' ''ஈரைம் பதின்மர்'' என்றும், சிலப்பதிகார வாழ்த்துக் காதை ஊசல் வரியில், ''ஓரைவர்'', ''ஈரைம் பதின்மர்'' என்றும் வருபவை பாண்டவர் கௌரவர் என்னும் சொல்லின்மை யால், பாண்டவரையும் கௌரவரையும் குறியாவென்றும், அத் தொகைப் பட்ட வேறிரு சாராரையே குறிக்குமென்றும், நண்பர் கூறுகின்றார்.

    'காய்தல் உவத்தல் அகற்றி நடுநிலையில் நின்று  ஆராயும் பழக்க முடைய' நண்பர்.

    'வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
     வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினும்
     தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே' (தொல்.536)

    என்னும் நூற்பாவையும்,

    'உய்த்துக்கொண் டுணர்தல்' (தொல். 1610)

    என்னும் உத்தியையும் சரியாய் உணர்ந்திருப்பாராயின், இத்தனைத்  தடுமாறி இடர்ப்படார்.

    காலத்தாலும் இடத்தாலும் வேறுபட்ட முடிநாகராயரும் இளங்கோ வடிகளும், பாரதப் போர்ச் செய்தியையே முறையே, புறப்பாட்டிலும் (2) சிலப்பதிகார வூசல்வரியிலும் பாடியுள்ளனர் என்பது, சொல்லையும் பொருளையும் நடுநிலையாய் நோக்குவார் எவர்க்கும் புலனாகாமற் போகாது.

    5. முடிநாகராயர் 2ஆம் புறப்பாட்டில் பாடிய உதியஞ் சேரலாதனும், மாமூலனார் 233ஆம் அகப்பாட்டிற் குறித்த உதியஞ் சேரலும், ஒருவனென மயங்குகிறார் நண்பர்.

    'வான வரம்பனை நீயோ பெரும
     அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
     நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
     ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
     பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்' 
(புறம். 2)

என்பது புறப்பாட்டுப் பகுதி.

    'மறப்படைக் குதிரை மாறா மைந்தின்
     துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
     முதியர்ப் பேணிய உதியஞ் சேரல்
     பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல
     கூளிச் சுற்றம் குழீஇஇருந் தாங்கு'
 (அகம். 233)

என்பது அகப்பாட்டுப் பகுதி.

இவ் விரண்டையும் ஒப்புநோக்கின், கீழ்வரும் வேற்றுமை புலனாம்.