பக்கம் எண் :

58மறுப்புரை மாண்பு

-58-

 

6. பேரா.தெ.பொ.மீ.தமிழுக்கதிகாரியா?

 

    தவளையினத்திற் பலவகையுண்டு. வெளிறித் தேய்ந்து போயிருப் பது தேரை; சொறியுள்ளதாயிருப்பது சொறியன்; பருத்துப் பச்சையா யிருப்பது மொங்கன்; மணலுக்குள்ளிருப்பது நுணல்; வாலறாத தவளைக் குட்டி அரைத் தவளையென்றும், தலைப்பிரட்டையென்றும் சொல்லப்படும். தேரை பாய்வதால் குழந்தை நோய்ந்து போமென்றும், இளநீர் சொத்தை யாகிவிடு மென்றும், பொதுமக்கள் கருதுவர்.

    ''தேரைக்கால் பெற்றுத் தேய்ந்துகா லோய்ந்ததே'' (ஒளவையார்)

    ''தேரையர் தெங்கிளநீ ருண்ணார் பழிசுமப்பர்''  (தமிழ்நா. 74)

    எதுகைபற்றிச் சிறப்புச் சொற்களைப் பொதுப் பொருளில் ஆள்வது பிற்காலப் புலவரியல்பு.

எ-கா :

 ''நாரை துயில்வதியும் ஊர குளந்தொட்டுத்
 தேரைவழிச் சென்றா ரில்.'' 
(பழ. 23)

    வழுதுணங்காய் என்பது கத்தரிக்காய். அதன் மறுவடிவம் வழுதலை என்பது. காய்களுள் மிக வழுக்கையாயிருப்பது கத்தரிக்காயாதலால், அது வழுதலையெனப் பெற்றது.

    வழுதலை, வழுதுணை என்னும் இரண்டும் கத்தரிக்காயையும், அதற்கினமான கண்டங்கத்திரியையும் குறிக்கும்.

    வழுதலை = 1. கத்தரி (பிங்.) 2. கண்டங்கத்தரி (மூ. அக.).
    வழுதுணை = 1. கத்தரிக்காய்

    ''வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்'' (ஒளவையார் பாடல்)

    ''வழுதுணங்காய் முதலிய காய்களையும்'' (மதுரைக். 529, நச்.உரை)

    2.கண்டங்கத்திரி.

    ''வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே'' (நாலடி. 264)

    மிகுதி - மீதி, மிகு - மீ - மீது = மேல். மீது - மீசு = மேல்.

    ''துவராடை மீசு பிறக்கிய மெய்யி னாரும்'' (தேவா. 38: 11)

    மீசு வைத்தல் = மேலே வைத்தல் (யாழ். அக.).

    மீசு - மீசை= 1. மேலிடம் ''மீசை நீள் விசும்பில்'' (சீவக.911)
               2. மேலுதட்டில் முளைக்கும் மயிர்.

   ''துடித்த தொடர் மீசைகள்'' (கம்பரா. மாரீச.49)

    மீசை - மிசை = மேல். மீசை-வீசை (உலகவழக்கு)

    மீசை தமிழ்ச்சொல் லன்றென்பது மீசையில்லார் கூற்றே.

    இளநீர் என்பது தேங்காயன்று; குரும்பைக்கும் தேங்காய்க்கும் இடைப்பட்ட வழுக்கையும் தோன்றாத நிலையிலுள்ள இளமையான நீரே. பின்பு, அது வழுக்கை தோன்றிய நிலையிலுள்ள நீரையும் குறித்தது.