அதுவும் இளமையான நீரே. மருந்துக்குச் சிறந்தது
வழுக்கை தோன்றாத இளநீர்தான். ஆயின், குளிர்ச்சிக்காகவும் நீர்வேட்கை
தணிப்பதற்காகவும் மட்டும் குடிக்கும் உடல்நல நிலையர், வழுக்கையும் தின்ன
விரும்புவதால், வழுக்கையிளநீர் வெட்டத் தரப்படும். இன்றும் இளநீர்க் கடைகளில்
வழுக்கையில்லாத இளநீர்க் காய்களைக் காணலாம். முற்றின காயிலுள்ள நீரை இளநீரென்று
எவரும் கூறார். அதைத் தேங்காய்த் தண்ணீர் என்றே சொல்வது மரபு.
இளநீர் என்னும் தொடரின் இரு
சொற்களும் பொருள் நிரம்பியவை. இளமையும் நீரும் உள்ளதே இளநீர். நீர் ஒரு
கொள்கலத்திலன்றித் தனித்திருக்க முடியாது. ஆகவே, இளநீர் என்பது தெங்கமட்டையோடு
கூடித்தானிருக்கும். இளநீர் என்பது நீரைமட்டும் குறிப்பின் இயற்பெயர். அதையுடைய
மட்டையையுங் குறிப்பின் (அடையடுத்த) ஆகுபெயர். இளநீர்க் கடைக்குச் சென்று
தேங்காய் இருக்கிறதா என்றாலும், தேங்காய்க் கடைக்குச் சென்று இளநீரிருக்கிறதா
என்றாலும், இல்லையென்றுதான் சொல்வர்.
தமிழுக்கென்று சிறப்பாக
நிறுவப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழிநூல்துறைப் பேராசிரியராக
வுள்ளவரும், மாநிலக் கல்லூரியில் அவருக்குரிய தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பதவி
தக்கார் வேறொருவருமின்மையால் வெறுமையாயிருக்கிறதென்று, மேனாட் கல்வியமைச்சர் திரு.
சுப்பிரமணியத்தால் புகழப் பெற்றவருமான பேரா.தெ.பொ.மீ. முண்டா நிலத்திற் பிறந்து
வளர்ந்தவர்போல் கூறிக்கொண் டிருப்பது பெருவியப்பாகவே
யிருக்கின்றது.
தமிழ்நாட்டில் தெங்கு
தொன்றுதொட்டு வளர்ந்து வருகின்றது. முழுகிப்போன குமரிக்கண்டத்திலும் ஏழ்தெங்க
நாடுகள் இருந்தன.
சின்ரிகுசா (jinrickshaw=ஆள்வலி வண்டி) என்பது ரிகுசா என்றும், பைசைக்கிள்
(bicycle) என்பது சைக்கிள் என்றும், குறுகி வழங்குதல் போல்,
இளநீர் என்பது முண்டாவில் நீர் என்று குறுகி வழங்கித் தேங்காயையும்
குறித்திருக்கலாம். அல்லது, இது வேறொரு சொல்லாகவு மிருக்கலாம்.
13. ''கீழைத்
தீவுகளிலிருந்து பல நறுமணப் பொருள்கள் நம் நாட்டில் வந்து, நம் மக்கள் மனத்தையும்
மூக்கையும் கவர்ந்தன. தக்கோலி, அருமணவன் முதலியவை அந்த நறுமணப் பொருள்களுள் ஒருசில.
இவை, தாம் விளையும் இடத்தின் பெயரையே தம் பெயராகக் கொண்டவை என்று
அடியார்க்குநல்லார் எடுத்துக் காட்டுகிறார். இவற்றை எப்படி ஒழித்துத்
தள்ளுவது?''
கீழைத் தீவுகளிலிருந்து
நறுமணப் பொருள்கள் நம் நாட்டுக்கு வலிய வரவில்லை. நம் நாட்டு வணிகரே அங்குச் சென்று
அப் பொருள்களைக்
கொணர்ந்தனர். |