பக்கம் எண் :

34வடமொழி வரலாறு

எ-டு :
     ஆதித்யர், சூர்ய, விஷ்ணு, சாவித்திரி என்னும் நான்கும் ஒரே
தெய்வத்தைக் குறிக்கின்றன. சூரியன் பகற்காலத்திற்கும் சாவித்திரி
இராக்காலத்திற்கும் உரியனவென்று, சாயனர் வேறுபாடு காட்டி யுள்ளனர்.
ஆதித்தர் பன்னிருவரும் பன்னிரு மாதத்திற்கு உரியவர் என்று கூறலாம்.
ஆயின், முதலில் அறுவரும் இடையில் எண்மரு மாகவே ஆதித்தர்
குறிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. விஷ்ணுவைப் பற்றிச் சிறப்பாகக்
கூறியிருப்பதெல்லாம், அது எழுச்சி உயர்ச்சி வீழ்ச்சி ஆகிய
மூவெட்டுகளால் வானைக் கடந்தது அல்லது கடக்கின்றது என்பதே.
இது அதனைச் சூரியனினின்று வேறு படுத்திக் காட்டுவ தாகாது.

(7) சில வேதத் தெய்வப் பெயர்கள் அல்லது அவற்றின் அடைமொழிகள் தமிழ்த் தெய்வங்களைக் குறிப்பனவல்ல.
   
  எ-டு :
  விண் - விண்டு = வானம் (சூடா.), முகில் (பிங்.), திருமால்
(பிங்.).      
   
  விஷ்ணு = கதிரவன் (வே.).

      விண்டு என்பதை விஷ்ணு என்பதனொடு மயக்கிவிட்டனர் பிற்கால
ஆரியர்.

     சிவன் என்னும் பெயர் சிவந்தவன் என்று பொருள்பட்டுச்
சேயோன் என்னும் முருகனை முன்னும் முத்தொழி லிறைவனைப்
பின்னும் குறிக்கும் தூய தமிழ்ச்சொல். வேதத்தில் அக்கினிக்கும்
இந்திரனுக்கும் உருத்திரனுக்கும் பொது அடைமொழியாக வரும் சிவ
என்னும் சொல், மங்கல அல்லது நல்ல என்று பொருள்படும்
பெயரெச்சம். இவ் விரண்டிற்கும் தொடர்பில்லை.

(8) சில தெய்வப் பெயர்கள் தூய தமிழ்ச்சொற்களே.

     எ-டு: வள் - வர் - வார் - வாரணம் = நிலத்தை வளைந்து
அல்லது சூழ்ந்து இருக்கும் கடல். வாரணம் - வாரணன்= நெய்தல்
நிலத்திற்குரிய கடல்தெய்வம்.

     வாரணன் - வருணா (இ.வே.). இந்திய ஆரியர் நீண்ட காலமாகக்
கடலையறியாது நிலவழியாய் வந்தவராதலின், நீலக்கடல் தெய்வத்தை
நீலவானத் தெய்வமாக மாற்றிவிட்டனர். பின்னர்த் தமிழரொடு தொடர்பு
கொண்டபின், மீண்டும் பழம்பொருளை ஓரளவு ஊட்டிக்கொண்டனர்.