பக்கம் எண் :

40வடமொழி வரலாறு

    "தென்றற் பிள்ளையை வயிறுளைந் தீன்றுதீம்
     பொருநைநீர் குளிப்பாட்டி
மன்றற் சந்தனப் பொதும்பரின் தமிழொடு
     வளர்த்துமென் மெலஞால
முன்றிற் பால்விளை யாடவிட் டமர்முது
     மலயவெற் பினுஞ்சையக்
குன்றத்தும் அகத்தீ சத்தும் முறைமுறை
     குலவிவீற் றிருக்கின்றான்."
(காஞ்சிப்பு. தழுவக்.286,288)

     இங்குக் காட்டப்பட்டுள்ள வரலாறு துல்லிய வழிப்போக்கு
வண்ணனையன்று. இச் செய்யுள்களினின்று அறியக் கூடியதெல் லாம்,
வேதக் காலத்திலேயே நாரதர், அகத்தியர் முதலிய ஆரியர் தென்னாடு
வந்து முத்தமிழையுங் கற்றனர் என்பதே.

     தேவரெல்லாருங் கூடி, "யாஞ் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து
தென்றிசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண் டிருத்தற்குரியர்
என்று வேண்டிக்கொள்ள, அவருந் தென்றிசைக்கட் போதுகின்றவர்
கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர்
யமதக்கினியாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை
வாங்கிக் கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார்
உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து,
துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர்
பதினெண் மரையும் பதினெண்கோடி வேளிருள்ளிட்டாரையும் அருவாள
ரையுங் கொண்டு போந்து, காடுகெடுத்து நாடாக்கிப் பொதியின் கணிருந்து"
என்னும் நச்சினார்க்கினியர் கூற்றும், உண்மையைப் பல்வேறு கட்டுக்
கதைகளுடன் புனைந்து கூறுவதே. இதிற் "பதினெண் கோடி" என்பது
பதினெண் குடி என்றிருத்தல் வேண்டும்.

     வடதிசை தாழ்ந்து தென்றிசை உயர்ந்தது என்பதும், அகத்தியர்
அவ் விருதிசையையும் சமப்படுத்தினார் என்பதும், குமரிமலை முழுகுமுன்
பனிமலை கடற்குள்ளிருந்தது என்பதையும்; அவர் கடலைக் குடித்தார்
என்பது, பனிமலையை அடியிற் கொண்டிருந்த கடல் அம் மலை
யெழுந்ததினால் மறைந்தது என்பதையும்; அவர் குடித்த கடலை
உமிழ்ந்தார் என்பது, கீழ்த்திசையி லிருந்த நாகநாடு மூழ்கியபின்
வங்காளக் குடாக் கடல் தோன்றியதையும்; அவர் விந்தத்தை
அடக்கினார் என்பது, பனிமலை யெழுமுன் விந்தமே வடஇந்திய
உயர்மலை யாயிருந்தது என்பதையும்; அவர் துவராபதிப் போந்து
பதினெண்குடி வேளிரைக் கொணர்ந்தார் என்பது, வேதக் காலத்தில் தமிழ
மரபினரே