பக்கம் எண் :

62வடமொழி வரலாறு

     (தாழை), கண்டு, கண்டங்கத்தரி (முட்கத்தரி) முதலிய பெயர்களை நோக்குக. இவற்றின் மூலம் பின்னர் விளக்கப்பெறும்.

     அக்கமணி இந்தியாவில் நேபாள நாட்டிற்கே உரிய இயற்கை
விளைபொருள். ஆரியர் வருமுன்பு வடஇந்திய வாணருட் பெரும்பாலர்
சிவமதத் திரவிடரே. சிவநெறிக்குரிய குறி (இலிங்க) வழிபாடு செய்துவந்த
பழங்குடி மக்கள் 'சிச்னதேவ’ என்று வேத ஆரியராற் பழிக்கப்பட்டனர்
(இ.வே.). ஆரிய வருகைக்கு ஆயிரமாண்டுகட்கு முற்பட்ட
அரப்பா-மொகஞ்சதாரோ மக்களும் சிவநெறியரே. அந் நெறி
தென்னாட்டிலேயே தோன்றிற்று.

"தென்னா டுடைய சிவனே போற்றி"
(போற்றித் திருவகவல்)
   
"தில்லையுட் கூத்தனே தென்பாண்டி
நாட்டானே"
(சிவபுராணம்)
   
"பாண்டி நாடே பழம்பதி யாகவும்"
(கீர்த்தித் திருவகவல்)

என்று மாணிக்கவாசகர் பாடுதல் காண்க.

     அக்குமணியணிவு முதலில் மருத்துவ முறையில் தோன்றி, பின்பு
சிவநெறியொடு தொடர்புபடுத்தப் பெற்றதாகத் தெரிகின்றது.

     அக்கம் என்னும் சொல்லை வடமொழியாளர் அக்ஷ என்று திரித்து,
அதை வடசொல்லாகக் காட்டல் வேண்டி, சிவபெருமான் முப்புர எரிப்பு
முயற்சியில் ஆயிரம் தேவயாண்டு மருண்டு விழித்திருந்ததால், அவர்
கண்களினின்று வடிந்த கண்ணீரில் அக்குமணி மரங்கள் தோன்றினவென்று
அக்ஷ என்னும் வட சொல்லின் கண் என்னும் பொருட்கேற்பக் கதையுங்
கட்டி விட்டனர். இக் கதையின் பொய்ம்மையைத் துடிசைகிழாரின்
'உருத்திராக்க விளக்கம்' என்னும் நூலிற் கண்டு தெளிக.

     ஆரியர் பிற்காலத்தில் வேத உருத்திரனைத் தமிழ்ச் சிவனொடு
மயக்கிவிட்டதால், உருத்திராக்கம் என்னும் சொற்குச் சிவமுண்மணி
அல்லது சிவமணி என்பதே பொருந்திய பொருளாம்.

அக்கை - அக்கா, L acca

அகவு - ஹ்வே (இ. வே.)

அகில் - அகரு (g)

     அகில் ஒருவகைக் கள்ளிமரத்தில் விளைவதென்பது,

     "கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும்" (4)

என்னும் நான்மணிக்கடிகை அடியால் அறியப்பெறும்.