பக்கம் எண் :

124வடமொழி வரலாறு

     சிலவிடத்து, உயிர்களும் ய வ ல ஆகிய இடையின மெய்களும் மூக்கொலியுடன் இசைக்கும். அன்று அவை அனுநாசிகம் எனப் படும்.

     ஊஷ்மாணங்களுள் ஹகரத்திற்கு மிடறும், சகரத்திற்கு
இடை யண்ணமும், ஷகரத்திற்கு முன்னண்ணமும், ஸகரத்திற்குப்
பல்லண் ணமும் பிறப்பிடமாம்.

     ஐ, ஒள என்னும் இரு நெடிலும் முதற்காலத்தில் ஆய், ஆவ் என
நீண்டொலித்தன வென்றும், ஆரியம் தமிழொடு தொடர்பு கொண்ட பின்,
அவை தமிழிற்போல் அய், அவ் எனக் குறுகி யொலிக்கின்றன வென்றும்
கூறுவர்.

     தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான பிற எழுத்து களெல்லாம்,
தமிழிற்போன்றே ஒலிக்குமென அறிக.

     ஏ,ஓ இரண்டும் தமிழில் எகர ஒகரங்களின் நீட்டமான
தனியொலிகளாகக் (simple vowels) கொள்ளப்பெறும்; சமற்கிருதத் தத்தில்
தவறாகப் புணரொலிகளாகக் (diphthongs) கொள்ளப்பெறு கின்றன.
இதற்கு அம் மொழியில் எகர ஒகர மின்மையும் குணசந்தியுமே காரணம்.

     அ,ஆ+இ,ஈ = ஏ. எ-டு : மஹா+இந்திர(ன்) = மஹேந்திர(ன்)

     அ,ஆ+உ,ஊ = ஓ. எ-டு : குல+உத்துங்கன் = குலோத்துங்கன்.

(3) எழுத்துச்சாரியை

"காரமும் கரமும் கானொடு சிவணி
நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை"
(தொல்.134)

     என்பது தொல்காப்பியம்.

     உயிரெழுத்தின் உதவியின்றித் தாமாக வொலிக்காத
மெய் யெழுத்துகளை ஒலிப்பித்தற் பொருட்டும், தாமாக வொலிக்கும்
உயிரெழுத்துகளையும் எளிதாக ஒலிப்பித்தற் பொருட்டும், சில
துணையொலிகளைப் பண்டைத் தமிழிலக்கண நூலார் அமைத் துள்ளனர்.
அவை சாரியை எனப்பெறும்.

     உயிரெழுத்துகளுள் குறிற்குக் கரமும், நெடிற்குக் காரமும்
சாரியையாம். ஐகார ஒளகாரங்கட்குக் கான் என்பது சிறப்புச் சாரியை.
இதைக் குறிற்கும் மெய்க்கும் பயன்படுத்தியது பிற்காலத்ததாகத்
தெரிகின்றது.

     மெய்யெழுத்துகட்கு அவ்வும் அகரமும் சாரியை.

"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்"
(தொல்.46)