பக்கம் எண் :

126வடமொழி வரலாறு

     இலக்கியமுமின்றி இந்தியாவிற்குட் புகுந்தனர். வேதமொழிக்கும்
வேதத்திற்கும் எழுதாக்கிளவி என்று பெயர். வேதத்தைக் குறிக்கும் ச்ருதி
(கேள்வி) என்னும் பெயரே ஆரியர்க்கு எழுத்தின்மையை உணர்த்தும்.

     இந்தியாவில் மட்டுமன்றி உலகத்திலேயே முதன்முதல்
நெடுங்கணக்கு வகுத்ததும் அதற்கு முறையமைத்ததும் தமிழரே.

           வேத ஆரியர் தென்னாடு வந்து தமிழரோடு தொடர்பு கொண்ட
பின்னரே, தமிழ்நெடுங்கணக்கைப் பின்பற்றி வட மொழிக்குக் கிரந்த
வண்ணமாலையை அமைத்துக்கொண்டனர்.

     உயிர் முன்னும் மெய் பின்னும், உயிருள் ஆ ஈ ஊ முன்னும்
ஏ ஓ பின்னும், ஒவ்வோர் உயிரிலும் குறில் முன்னும் நெடில் பின்னும்,
ஏயின் பின் ஐயும் ஓவின் பின் ஒளவும், ஆய்தமொத்த விஸர்க்கம்
உயிர்க்கும் மெய்க்கும் இடையும், மெய்யுள் வலிவகை முன்னும் மெலி
பின்னுமாகக் கசடதப முறையிலும், அவற்றிற்குப்பின் இடையினம் ய ர
ல வ முறையிலும், அமைந்திருப்பது, வடமொழி வண்ணமாலை தமிழ்
நெடுங்கணக்கு முறையை முற்றுந் தழுவிய தென்பதை, எத்துணைத்
தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றது ! இஃதொன்றே வடமொழியின் பின்மையைக் காட்டப் போதிய சான்றாம்.

     உயிர் வரிசையுட் செருகப்பட்ட சிறப்பெழுத்துகளை நோக் கினும்,
முற்றுகரத்தை யடுத்துக் குற்றுகரமும், ரகரக் குற்றுகரத்தின் பின் லகரக்
குற்றுகரமும் வைக்கப்பெற்றிருப்பது, எத்துணைத் தமிழ்முறை யொட்டியது !

     இங்ஙன மிருப்பினும்,தமிழர் வேற்று நாட்டினின்று வந்தவ ரென்றும்,
ஆரியரால் நாகரிகப்படுத்தப் பெற்றவரென்றும், இரு தவறான முற்கோள்
கொண்டிருந்ததினாலும், பண்டைத் தமிழிலக் கியத்தைப் பார்க்கப்
பெறாமையாலும், தமிழின் தொன்மை முதன்மை தாய்மை தலைமை
ஆகியவற்றை யுணராது, வடமொழி வண்ண மாலையைத் தழுவியது தமிழ்
நெடுங்கணக் கென்று, தலைகீழாகத் தவறான முடிபிற்குக் கால்டுவெலார்
வர நேர்ந்த தென்று கண்டுகொள்க.

(5) அளபு

     அளபு என்பது எழுத்தொலியின் மாத்திரை அல்லது அளவு. அளபு,
மாத்திரை என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுள் முன்னது தமிழ்ச்
சிறப்புச் சொல், பின்னது தென்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுச் சொல்.