| மொழிகள் அனைத்திலுமே பொதுஉடைமை நூல்கள் பொதுஉடைமை யியக்கத்தாரால் எழுதிப் பரப்பப் படுவதை யாவரும் அறியலாம். உருசியாவின் இன்னொரு படிப்பினை பல இனங்களிடையேயும் உள்ளார்ந்த ஒற்றுைமையை விளைவிக்கும் முறை ஆகும். இனத்துக்குத் தனிப்பேராண்மை தந்தால் இனப்பிரிவு நிலைபெற்றுவிடும் என்று சிலரும், இனப் பேராண்மையால் சிறுபான்மை இனம் மிகுதிச் சலுகை பெற்றுப் பெரும்பான்மையினர் பேராண்மை அளவு குன்றும் என்றும் பலர் அஞ்சுகின்றனர். அமெரிக்க அரசியலில் மேலவையில் சிறு நாடும் பெரு நாடும் ஒரே அளவு பேராண்மை பெறுகின்றன. உருசியாவில் கூட்டுறவு அரசியல் மன்றில் கூட்டுறவு மன்றில் மக்கள் தொகையை ஒட்டிய சரிநிகர் பேராண்மை (கூட்டுத் தொகுதி முறையில்) அமைந்திருக்கிறது. ஆனால் இனங்களின் ‘பாதுகாப்பை முன்னிட்டு இனமன்றத்தில் இனங்கள் ஒவ்வவொன்றுக்கும் அவற்றின் பெருமை சிறுமைகளைப் பாராமல் சரிநிகர் நிலையான பேராண்மை தரப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட எட்டுக் கோடிப் பேரை உட்கொண்ட பேருருசியருக்கும் ஆயிரக்கணக்கிலுள்ள சின்னஞ் சிறு இனங்களுக்கும் ஒரே அளவு பேராட்கள் தான். இந்தியாவில் இதற்கு நேர்மாறாக இனப் பாதுகாப்புக்கு இனப் பேராண்மை (தனித் தொகுதி) தர இணங்காது நாட்டுரிமைக் கழகம் போராடுகிறது. ஓரினத்துக்குத் தந்து மற்ற இனங்களுக்கு மறுக்கிறது. பேரினத்துக்கும் சிற்றினத்துக்கும் ஒப்பான பேராண்மை உடைய மன்றம் ஒன்றும் தொகைவாரியான மன்றம் ஒன்றும் அமைவதே இச்சிக்கலைத் தீர்க்கும் வழியென உருசியா காட்டும். |