பக்கம் எண் :

ஞானரதம் - கந்தர்வலோகம் - இன்ப உலகம்

மறுநாள் மனத்திடம், "இப்போது, எங்கே போகலாம்?" என்று கேட்டேன்.

"துன்பக் கலப்பற்ற இன்பங்கள் நிறைந்திருக்கும் உலகத்திற்குப் போய் வருவோமே" என்றது.

"நன்று கூறினை" என நான் மகிழ்ச்சி பாராட்டி, அப்பால் முன்போலவே எனது ஞானத்தேரில் ஏறிக் கந்தர்வ லோகத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கே கண்ட காட்சிகளையும், அனுபவித்த போகங்களையும் என்னால் கூடியவரையும் உள்ளது உள்ளவாறு கீழே எழுதுகிறேன். அந்தப் போகங்களிற் சில, தற்காலத்தில் நமது தேசத்து ஜனங்களால் மதிக்கப்பெறும் ஆசார தர்மங்களுக்கு விரோதம் என்று நம்மவர் கருதுவார்களாயின், அதன் பொருட்டு, என் மீது பழி கூறலாகாது. இந்த பாரததேசத்தில் தற்காலத்திலே வாழும் அடிமை ஜனங்கள் "இந்த இன்பம் அதர்மமானது. அந்தச் செய்கை அகாரியமானது" என்று தர்மப் பிரசங்கங்கள் செய்யும்போது, உண்மையாகவே எனக்கு நகைப்புண்டாகிறது. மகரிஷிகளுக்கும் தேவதைகளுக்கும் சந்ததியாராகத்தோன்றியவர்களாயினும், தற்காலத்தில் இந்நாட்டு ஜனங்கள் உலகத்திலுள்ள