ரஸிகசிரோமணி:- "முன் கதையை எந்த இடத்தில் நிறுத்தினேன்? பளிச்சென்று ஞாபகம் வரவில்லை. உனக்கு ஞாபக மிருந்தால் அடியெடுத்துக் கொடு" என்று கேட்டது. குயில் அடியெடுத்துக் கொடுக்கிறது:- "தட்டிக்கொண்டான் செட்டி தஞ்சாவூரிலே மதுரை மாணிக்கஞ் செட்டி என்பவனுடைய குமாஸ்தாவாக இருக்கையில் யஜமானுடைய பணத்தில் பெருந் தொகையை அழுத்திக் கொண்டு கள்ளக் கணக்கனுப்பினான். தனக்கு நேரிட்ட அநியாய நஷ்டத்திலிருந்து ஒருவாறு தப்பவேண்டுமென்று யோசனை செய்து மதுரை மாணிக்கஞ்செட்டி மானி அய்யன் என்ற பிராமணனை வரவழைத்துத் தஞ்சாவூருக்குப் போகும்படி சொல்லுகிறான். அந்த இடத்தில் உன் கதையை நிறுத்தினாய். மேலே நடத்து" என்றது. ரஸிகசிரோமணி பின்வருமாறு கதை சொல்லலாயிற்று. அந்த மாணிக்கஞ் செட்டி சொல்லுகிறான்:- "ஐயரே, நீர் உடனே புறப்பட்டுத் தஞ்சாவூருக்குப் போக வேண்டும். அங்கே தட்டிக் கொண்டான் செட்டி வீடெங்கே என்று கேட்டால் யாவரும் சொல்லுவார்கள். நடுத்தெருவிலே கிழக்கோரத்து வீடு. அவனிடத்தில் எப்படியேனும் சிநேகம் செய்து கொண்டு, அவன் வீட்டில் நெருங்கிப் பழக வேண்டும். நமக்கு அவன் கள்ளக் கணக்கு அனுப்பியிருக்கிறான். என்றாலும், தனது சொந்த உபயோகத்தைக் கருதி நியாயமான கணக்கு அவசியம் எழுதி வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்குச் சுவடியை என்ன தந்திரம் பண்ணியேனும் இங்கே கொண்டு வந்து விடவேண்டும்." |