"இந்தக் கவிராயருக்குக் கர்வம் அதிகம்போல தோன்றுகிறது." த.கொ.செ. - சந்நிதானத்தின் மீது ஆசு கவி பாடியிருந்தும் இப்படிச் சொல்லுகிற முகாந்தரமென்ன? ஆ.ஸ். - நம்மிடத்தில் அவருக்கு பக்தி ஏற்பட்டது மெய்தான்; ஆனாலும் கர்வி. கர்வியை நம்பக்கூடாது. கபடியை நம்பினாலும் நம்பலாம், கர்வியை நம்பக்கூடாது. த.கொ.செ. - கபடியை எப்படி நம்புவது? ஆ.ஸ். - நாம் இருவரும் பரஸ்பரம் நம்புகிறோம். நாம் கபடிகளில்லை. த.கொ.செ. - ஆக்ஷேப மென்ன? கர்வியைத்தான் நம்பக்கூடாது. சந்நிதானத்தில் உரைப்பதே உண்மை. ஆ.ஸ். - "தத்ஸ விதுர் வரேண்யம்." த.தொ.செ. - அதன் பொருள் அடியேனுக்கு விளங்கச் சொல்ல வேண்டும். ஆ.ஸ். - "இது ஸந்தியாவந்தன மந்திரம். அதன் பொருளை இதர ஜாதியாருக்குச் சொல்லக் கூடாது. நான் என் மனதுக்குச் சொல்லிக் கொண்டேன்" என்றான். பிறகு ஸந்நியாஸி, "நான் போய் வருகிறேன்" என்று சொல்லி எழுந்தான். தட்டிக்கொண்டான் செட்டி மிகவும் பரிவுடன், "இன்றும் நாளைக்கும் மாத்திரம் அடியேன் குடிலில் எழுந்தருளியிருந்து விட்டுப் போக வேண்டும்" என்று வேண்டினான். சிறிது நேரம் அதைக் குறித்துத் தர்க்கம் நடந்தது. கடைசியாக ஸந்நியாஸி அரை மனது போலே ஒப்புக்கொண்டான். செட்டி வீட்டுப் பக்கத்தில் ஒரு தோட்டம். அந்தத் தோட்டத்தில் ரமணீயமான குடிசை. அங்கு சாமியார் குடியேறினான். போஜனம் மாத்திரம் கோயிலிலிருந்து கொண்டு வரும்படி செட்டி திட்டஞ் செய்தான். ஸந்நியாசி பரிசாரகனிடம் 'எனக்குப் புளியோதரை பிடிக்காது' என்று ஒரு வார்த்தை மாத்திரம் சொன்னான். |