பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (காட்டுக்கோயிலின் கதை)

விவேக சாஸ்திரி தமது மக்களை நோக்கிச் சொல்லுகிறார்:-

முன்னொரு காலத்தில் பொன்னங்காடு என்ற பெருங்காட்டில் வீரவர்மன் என்றொரு சிங்கம் அரசு செலுத்திக் கொண்டு வருகையில், அதனிடத்துக்கு விகாரன் என்ற புறத்து நரியொன்று வந்து வணக்கம் செய்தது. "நீ யார்? உனக்கென்ன வேண்டும்?" என்று வீரவர்மன் கேட்டது.

அப்போது நரி சொல்லுகிறது:- "என் பெயர் விகாரன். வடக்கே நெடுந்தூரத்திலுள்ள பேய்க்காடு என்ற வனத்தில் அரசு செலுத்தும் தண்டிராஜன் என்ற சிங்கத்திடம் என் பிதா மந்திரியாக இருந்தார். அவர் காலஞ் சென்ற பிறகு, அந்த ஸ்தானத்தில் என்னை வைக்காமல், அவ்வரசன் தனது குணத்துக்கிணங்கியபடி கண்டகன் என்ற பெயர் கொண்ட கிழ ஓநாயை மந்திரியாகச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டான். 'மதியாதார் தலை வாசல் மிதிக்க வேண்டாம்' என்று வசனமிருப்பதால் நான் அந்த ராஜ்யத்தை விட்டுப் பல தேசங்களில் ஸஞ்சாரம் செய்து வருகையிலே, ஸந்நிதானத்தின் வீரச் செயல்களையும் தர்மகுணங்களையும் கேள்விப்பட்டு, 'ஆஹா! வேலை செய்தால் இப்படிப்பட்ட சிங்கத்தினிடமன்றோ செய்யவேண்டும், என்ற ஆவல் கொண்டவனாய், ஸந்நிதானத்தைத் தரிசனம் செய்து நம்முடைய பிறப்பைப் பயனுடையதாகச் செய்து கொள்ளவேண்டுமென்ற நோக்கத்துடன் இங்கு வந்தேன். தம்மைக் கண்ட மாத்திரத்தில் எனது கலி நீங்கிவிட்டது" என்று சொல்லிற்று.