பக்கம் எண் :

இரண்டாம் பகுதி - நம்பிக்கை (கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டம்)

அப்போது வீரவர்மன் தனது சபையில் வந்து நின்ற மேற்படி நால்வரையும் கடைக்கண்ணால் நோக்கிப் புன்னகை செய்தது.

உபாயவஜ்ரன் சொல்லுகிறது:- நான் அந்த நால்வரையும் கொண்டுபோய், ஓரிடத்திலே நிறுத்திக் கொண்டு, "விளக்கண்ணா, தொளைச்சாண்டி, குடிலப்பா, கிழக்கரியா, நீங்கள் நாலு பேரும் சிஷ்யராகவும், நான் குருவாகவும் வேஷம் போட்டுக் கொள்ள வேண்டும்" என்றேன். அந்தப்படி வேஷம் தரித்துக் கொண்டோம். கோவிந்த நாம சங்கீர்த்தனக் கூட்டமாகப் புறப்பட்டோம். பொது எல்லையில் நாக நதியில் ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனாதிகளை முடித்துக் கொண்டோம். 'கோவிந்த நாம சங்கீர்த்தனம்!' என்று நான் கத்துவேன்.

"கோவிந்தா! கோவிந்தா!" என்று சிஷ்யர் நால்வரும் கத்துவார்கள். கையிலே ஆளுக்கொரு தம்பூர், கோவிந்த நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே எதிரி யெல்லைக்குள் பிரவேசித்தோம். நாகமலையில், குடியன் கோயிலுக்குப் பக்கத்திலே வேதிகை கட்டிக் கரடிச்சாத்தான் ஹோமம் வளர்க்கும் யாக சாலைக்குப் போய்ச் சேர்ந்தோம். பகல் முழுதும் நாங்கள் கோவிந்த நாமத்தை விடவேயில்லை. கிழக்கரியனுக்குத் தொண்டை கட்டிவிட்டது. எங்களைக் கண்டவுடனே கரடிச்சாத்தான் 'வாருங்கள் வாருங்கள்' என்று உபசாரம் சொல்லிப் பக்கத்திலிருந்த யாக கோஷ்டியாரிடம் அடியேனைக் காட்டி "இவர் பெரிய பாகவதர். துளஸீதாஸ், கபீர்தாஸ் அவர்களுடைய காலத்துக்குப் பிறகு இவரைப் போலே பக்தர் யாரும் கிடையாது" என்று சொல்லிற்று.

மாலையில் யாக கோஷ்டி கலைந்து விட்டது.