பக்கம் எண் :

உபாயவஜ்ரன் என்ற நரியின் திறமைகள்

அப்படியே உத்தண்டி ஓலை எழுதி நரிச்சி கையிலே கொடுத்தான். அதை வாகிக் கொண்டு கூனிச்சியாகிய நரிச்சி நல்லதங்கை பல்லக்குப் பரிவாரங்களுடன் உத்தண்டி ராஜனுடைய ஸ்தானாதிபதி என்ற பதவியில் மாமனார் குண்டோதர ராயசிங்க மகா சிங்கருடைய ராஜதானிக்கு வந்து சேர்ந்தாள்.

இது நிற்க.

பேய்க்காட்டில் உத்தண்டி தன் மனைவியாகிய சிங்கச்சி காமாக்ஷியினிடம் போய் நடந்த வர்த்தமானத்தையெல்லாம் சொன்னான். அவள் மிகவும் கோபத்துடன்:- "என்னுடைய பிதாவிடமிருந்து சைந்ய பலம் தருவிக்க வேண்டுமானால், அதற்கு என் அனுமதியில்லாமல் நரிச்சி நல்லதங்கையை அனுப்பினால் நடந்துவிடுமென்று நீ நினைக்கிறாயா?" என்றாள்.

அப்போது உத்தண்டி சொல்லுகிறான்:- "உனக்கு ராஜ நீதியே தெரியவில்லை; காமாக்ஷி, ராஜ்ய அவசரத்தைக் கருதி இரண்டாம் பேரிடம் சொல்லாமல் எத்தனையோ காரியம் செய்ய நேரிடும்" என்றான்.

"ராஜ்ய அவசரத்தைக் கருதிச் சரியான மந்திராலோசனையில்லாமல் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் தோற்றுப்போவதே வாடிக்கையாக நீங்கள் நடத்தி வருகிறீர்கள்" என்று காமாக்ஷி சொன்னாள்.

"ஆபத்து சமயத்திலே ஏசிக் காட்டுவது பாவிகளான ஸ்திரீகளுடைய வழக்கம்!" என்று உத்தண்டி சொன்னான்.