பக்கம் எண் :

விசாலாக்ஷிக்குக் கிடத்த உதவி

இதற்குள், மேடையைவிட்டுக் கீழே இறங்கிச் சென்ற மகள் திரும்பி வந்து, "அப்பா, வாயிலிலே ஒரு பிராமண விதவை ஒரு சிறு குழந்தையுடன் வந்து நிற்கிறாள். ஏதோ அவசர காரிய நிமித்மாக உம்மை உடனே பார்க்க வேண்டுமென்று சொல்லுகிறாள்" என்றாள்.

"அவளுக்கு எத்தனை வயதிருக்கும்?" என்று ஜீ. சுப்ரமணிய அய்யர் கேட்டார்.

"இருபது வயதிருக்கலாமென்று தோன்றுகிறது" என்று மகள் சொன்னாள்.

"சரி. ஒரு நாற்காலியைக் கொணர்ந்து என் எதிரே போடு; அந்தப் பெண்ணை வரச் சொல்" என்று அய்யர் சொன்னார்.

மகள் அங்ஙனமே ஒரு நாற்காலி எடுத்துக்கொண்டு வந்து அவரெதிரே போட்டாள்; அப்பால் கீழே சென்றாள். சில க்ஷணங்களுக்குள்ளே, நம்முடைய விசாலாக்ஷி குழந்தை சந்திரிகையுடன் அந்த மேடைக்கு வந்து ஜீ. சுப்ரமணிய அய்யருக்கெதிரே போட்டிருந்த நாற்காலியின்மேல் உட்கார்ந்தாள்.

எந்த விசாலாக்ஷி? சென்ற அத்தியாயத்தில் பூகம்பத்திலே தப்பிப் பிழைத்த விசாலாட்சி. அங்ஙனமே பூகம்பத்தில் பிழைத்த சந்திரிகை என்ற குழந்தையுடன் வந்து ஜீ. சுப்பிரமணிய அய்யர் முடியசைப்பால் உணர்த்திய குறிப்பின்படி, அவரெதிரே ஆசனத்தில் அமர்ந்தாள். "எந்த ஊரம்மா?" என்று அய்யர் கேட்டார்.

"பொதியை மலைச்சாரலில் குற்றாலத்துக்கருகே வேளாண்குடி என்ற கிராமம்" என்று விசாலாட்சி சொன்னாள்.