"ஓஹோஹோ! மூன்று வருஷங்களுக்கு முன்பு ஏறக்குறைய இதே மாசத்தில் மேற்படி கிராமத்தில், சூத்திரத் தெருக்களெல்லாம் தப்பிப் பிழைக்க, அக்ரஹாரம் மாத்திரம் பூகம்பத்தில் அழிந்து போனதாகக் கேள்விப்பட்டேன்; அதே வேளாண்குடிதானா?" என்று அய்யர் கேட்டார். விசாலாக்ஷி "ஆம்" என்றாள். "நீ மிகவும் யௌவனமுடையவளாகவும் அழகுடையவளாகவும் இருக்கிறாயே! உனக்கு இந்தக் கைம்பெண் நிலைமை நேர்ந்து எத்தனை காலமாயிற்று?" என்று அய்யர் கேட்டார். "பதினைந்து வருஷங்களாயின" என்று விசாலாக்ஷி சொன்னாள். "உனக்கு இப்போது எத்தனை வயது?" என்று அய்யர் கேட்டார். "இருபத்தைந்து" என்று விசாலாட்சி சொன்னாள். "பத்து வயதில் கன்னிப் பருவத்தில் விதவையாய் விட்டாயா?" என்று அய்யர் கேட்டார். "ஆம்" என்று விசாலாட்சி சொன்னாள். அதைக் கேட்டவுடனே தமது சொந்த மகளொருத்தி இளம் பிராயத்திலே விதவையானதும், பிறகு தாம் அவளுக்குப் பம்பாயிலே சென்று தென்னாட்டு வைதிக பிராமணரொருவருக்கு விவாகம் செய்து கொடுத்ததும், அம் மகள் தன் கணவனுடன் நீடு சுகித்து வாழும் பாக்கியம் பெறாமல் மிக விரைவிலே மடிந்ததும், தம்முடைய தர்ம பத்தினி உயிர் துறந்ததும் - ஆகிய இச் செய்திகளெல்லாம் ஜீ. சுப்பிரமணிய அய்யரின் ஞாபகத்துக்கு வர, அப்போது, சிங்கத்துக்கும் இடிக்கும் அஞ்சாத அவருடைய வீர நெஞ்சம் இளகி, அவர் பச்சைக் குழந்தைபோல் விம்மி விம்மி அழத் தலைப்பட்டார். சில க்ஷணங்களுக்குள்ளே தம்மைத் தாம் தேற்றிக் கொண்டு, ஜீ. சுப்பிரமணிய அய்யர் விசாலாட்சியை நோக்கி, "நீ இங்கே வந்ததன் நோக்கம் யாது?" என்று கேட்டார். |