ராஜமகேந்திரபுரத்தில் வீரேசலிங்கம் பந்துலு வீட்டைத் தேடிப் போய் விசாலாட்சி விசாரித்தாள். அவர் அங்கில்லை யென்றும், அவள் வந்த நாளுக்கு முதல் நாள்தான் புறப்பட்டுச் சென்னப்பட்டணத்துக்குப் போனா ரென்றும் தெரிய வந்தது. சென்னை எழும்பூரில் பண்டித வீரேசலிங்கம் பந்துலு ஒரு தனி வீட்டில் தம் மனைவியுடன் வந்து தங்கியிருந்தார். விசாலாட்சி சென்னப்பட்டணத்துக்கு வந்து, மறுநாட் காலையில் எழும்பூரில் அவர் இருந்த வீட்டிற்குப் போனாள். உள்ளே அவர் மாத்திரம் நாற்காலி மேஜை போட்டு உட்கார்ந்து கொண்டு ஏதோ நூலெழுதிக் கொண்டிருந்தார். விசாலாட்சி அவரை நமஸ்காரம் பண்ணினாள். ஜீ. சுப்பிரமணிய அய்யரிடமிருந்து தான் வாங்கிக்கொண்டு வந்த கடிதத்தைக் கொடுத்தாள். வீரேசலிங்கம் பந்துலு தன் எதிரேயிருந்த நாற்காலியின் மீது விசாலாட்சியை உட்காரச் சொன்னார். அவள் தன் மடியில் சந்திரிகையை வைத்துக்கொண்டு அந்நாற்காலியின் மீதுட்கார்ந்தாள். வீரேசலிங்கம் பந்துலு அவள் கொணர்ந்த கடிதம் முழுதையும் வாசித்துப் பார்த்துவிட்டு, அவளை நோக்கி 'இன்றைக்கென்ன கிழமை?' என்று தமிழில் கேட்டார். அவள் 'புதவாரமு' என்று தெலுங்கில் மறு மொழி சொன்னாள். "மீகு தெலுகு வச்சுனா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார். "அவுனு சால பாக வச்சுனு" என்றாள் விசாலாட்சி. இங்கு நமது கதை வாசிப்போரிலே பலருக்குத் தெலுங்கு பாஷை தெரிந்திருக்க வழியில்லை யாதலால், அவ்விருவருக்குள் தெலுங்கில் நடைபெற்ற சம்பாஷணையை நான் தமிழில் மொழி பெயர்த்துத் தருகிறேன். "உனக்குத் தாய் தந்தையர் இருக்கிறார்களா?" என்று வீரேசலிங்கம் பந்துலு கேட்டார். "இல்லை" என்றாள் விசாலாட்சி. "அண்ணன், தம்பி, அக்காள், தங்கை - ?" |