"எங்கே? ஏதேனும் ஒரு பாட்டுப் பாடிக் காட்டு, பார்ப்போம்" என்று பந்துலு கேட்டார். அந்த சமயத்தில் சமையலறைக்குள் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவளாகிய வீரேசலிங்கம் பந்துலுவின் கிழமனைவி உள்ளேயிருந்து இவர்கள் பேசிக் கொண்டிருந்த கூடத்துக்கு வந்து ஒரு நாற்காலியின் மீது உட்கார்ந்தாள். அவளைக் கண்டவுடன், விசாலாட்சி எழுந்து நமஸ்காரம் பண்ணினாள். அவள் ஆசீர்வாதங் கூறி வீற்றிருக்க விடை கொடுத்து விசாலாட்சியின் மடியிலிருந்த குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள். குழந்தை வீறிட்டு அழத் தொடங்கிற்று. "என்னிடம் கொடு, நான் அழாதபடி வைத்துக் கொள்ளுகிறேன்" என்று பந்துலு சொன்னார், அவள் அக் குழந்தையைத் தன் கணவனிடம் கொடுத்தாள். அவர் மடிக்குப் போனவுடனே குழந்தையாகிய சந்திரிகை அழூகையை நிறுத்தியது மட்டுமன்றி வாயைத் திறந்து புன்னகை செய்யத் தொடங்கினாள். "கிழவருக்கு வேறொன்றுந் தெரியாவிட்டாலும், குழந்தைகளை அழாதபடி வைத்துக் கொள்வதில் மிகவும் சமர்த்தர்' என்றாள் கிழவி. "ஆமாம்! எனக்கென்ன தெரியும்? படிப்புத் தெரியுமா, இழவா? நீ தான் சகல கலா பண்டிதை" என்று சொல்லி வீரேசலிங்கம் பந்துலு முறுவலித்தார். அப்பால், வீரேசலிங்கம் பந்துலு நமக்கு ஜீ. சுப்பிரமணிய அய்யர் எழுதிய கடிதத்தில் கண்டபடி விசாலாட்சியின் விருத்தாந்தங்களை யெல்லாம் விரித்துக் கூறினார். அவருடைய மனைவி இதைக் கேட்டு:- "சென்ற வாரம் தங்களைப் பார்க்கும் பொருட்டுத் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் ஒரு அய்யங்கார் வந்திருந்தாரன்றோ? அவர் தமக்கு ஒரு விதவைப் பெண் பார்த்து விவாகம் செய்து வைக்க வேண்டுமென்று தங்களை வேண்டினாரன்றோ? அவருக்கு இந்தப் பெண்ணைக் கொடுக்கலாம். இவளுடைய முதல் புருஷன் ருது ஆவதற்கு முன்னே யிறந்தானா? பிந்தி இறந்தானா?" என்று வினவினாள். |