பக்கம் எண் :

விசாலாக்ஷியின் ஏமாற்றம்

அப்போது வீரேசலிங்கம் பந்துலு:- "அந்த கோபாலய்யங்கார் நீ சொன்ன லக்ஷணங்களெல்லாம் உடையவரென்பது மெய்யே. ஆனால் சாராயம் குடிக்கிறார். மாம்ச போஜனம் பண்ணுகிறார். கட்குடியர். வேறென்ன நல்ல லக்ஷணங்களுமுடையவராக இருப்பினும் அவற்றை விரைவில் இழந்து விடுவார்கள். அவர்களுடைய செல்வமும் பதவியும் விரைவில் அழிந்து போய் விடும்" என்றார்.

இது கேட்டு விசாலாக்ஷி:- "சரி, அவர் என்னை விவாகம் செய்துகொள்ளும்படி ஏற்பாடு செய்யுங்கள். அவருடைய கெட்ட குணங்களை யெல்லாம் நான் மாற்றி விடுகிறேன்" என்றாள்.

"குடி வழக்கத்தை மாற்றப் பிரமதேவனாலேகூட முடியாது" என்று வீரேசலிங்கம் பந்துலு சொன்னார்.

அதற்கு விசாலாக்ஷி:- "என்னால் முடியும். சாவித்ரி தன் கணவனை யமனுலகத்திலிருந்து மீட்டுக் கொண்டு வரவில்லையா? பெண்களுடைய அன்புக்குச் சாத்தியப்படாதது யாதொன்றுமில்லை. நான் அவருடைய மாம்ச போஜன வழக்கத்தை உடனே நிறுத்தி விடுவேன். மது வழக்கத்தை ஓரிரண்டு வருஷங்களில் நிறுத்தி வைப்பேன். மற்ற லக்ஷணங்களெல்லாம் அவரிடம் நல்லனவாக இருப்பதால் இவ்விரண்டு குற்றங்களிருப்பது பெரிதில்லை. நான் அவரை மணம் புரிந்து கொள்ள முற்றிலும் சம்மதப் படுகிறேன்" என்றாள்.

இது கேட்டு வீரேசலிங்கம் பந்துலு:- "சரி. பாட்டுப் பாடத் தெரியுமென்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம்" என்றார்.

"சுருதிக்குத் தம்பூர் இருக்கிறதோ?" என்று விசாலாட்சி கேட்டாள்.