"அவளுடைய பிதாவின் பெயரென்ன? அவர் இப்போது வீட்டிலிருப்பாரா?" என்று கோபாலய்யங்கார் கேட்டார். "அவளுடைய பிதாவின் பெயர் சுப்புசாமிக் கோனார். அவர் இப்போது வீட்டிலிருப்பார்" என்று நாயுடு சொன்னார். உடனே கோபாலய்யங்காரின் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் நாயுடு, பந்துலு இருவரும் சேர்ந்து மூவருமாகப் பக்கத்துத் தெருவிலிருந்த சுப்புசாமிக் கோனாருடைய வீட்டுக்குப் போனார்கள். அங்கு சுப்புசாமிக் கோனார் காலையிலெழுந்து பழையது சாப்பிட்டு விட்டு, வெற்றிலை பாக்கு புகையிலை போட்டுக்கொண்டிருந்தார். நாயுடுவையும் அவருடைய நண்பரிருவரையும் கண்டவுடன் அவர் எழுந்து நின்று, உள்ளேயிருந்து ஒரு நீளப் பலகை கொண்டு போட்டார். வந்தவர் மூவரும் அதன்மீதுட்கார்ந்து கொண்டார்கள். பிறகு, நாயுடு தாங்கள் வந்த நோக்கத்தை சாங்கோபாங்கமாகக் கோனாரிடம் எடுத்துரைத்தார். செக்கச் செவேரென்ற முகமும், கன்னங் கரேலென்ற சுருள் சுருளான கத்தரித்த முடிமயிரும், அகன்ற தெளிந்த அறிவுச்சுடர்கின்ற விழிகளும், துருக்க மீசையும், விரிந்த மார்பும், திரண்ட தோளும், வயிரப் பொத்தான் போட்ட பட்டுச் சட்டையும், தங்கக் கடிகாரமுமாகத் தமக்கு டிப்டி கலெக்டர் கோபாலய்யங்கார் மாப்பிள்ளையாக வருவதைக் கண்டு சுப்புசாமிக் கோனார் பரவசமாய் விட்டார். அவருள்ளத்தில் ஆனந்தக்களி ததும்பலாயிற்று. ஆயினும் பிராமணருக்குப் பெண் கொடுத்தால் பாவம் நேருமென்ற ஒரு விஷயம் மாத்திரம் அவர் மனதை மிகச் சஞ்சலப் படுத்திற்று. |