பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

இப்படி யிருக்கையில், விசாலாட்சி சோமநாதய்யர் வீட்டுக்கு வந்து சேர்ந்து சில தினங்கள் கழிந்தவுடனே, ஒரு நாள் ஏகாதசி இரவு. ராமுப்பாட்டிக்கு அன்று முழுதும் போஜனம் கிடையாது. ஆதலால், அவள் அன்று வழக்கப்படி இரவில் இரும முடியவில்லை. அயர்ந்து தூங்கிப்போய் விட்டாள். அவள் கீழ்த்தளத்தில் வெளியோரத் தரையில், ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு 'புயற்காற்று' விளக்கும் ஒரு தீச்சட்டியும் கட்டிலுக் கருகில் இருபுறங்களிலும் பாரிசத்துக் கொன்றாக, இரண்டு நாற்காலிகளின் மீது, அதாவது சாய்விட மில்லாத நாற்காற் பலகைகளின் மீது, வைக்கப்பட்டிருந்தன.

அதற்கு மேற்கே மூன்றறை கழித்து நான்கா மறையில் விசாலாட்சி ஒரு கட்டில் மெத்தை போட்டுப் படுத்திருக்கிறாள். அவளுடைய கட்டிலின் அருகே கட்டிலைக் காட்டிலும் சிறிதளவு உயரமான ஒரு நாற்காற் பலகையின் மீது ஒரு புயற்காற்று விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவள், கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்த ஒரு நாவல் தானே நழுவி வெள்ளை வெளேரென்ற உறையின்மீது விழுந்து கிடந்தது. அவளுடைய கரிய நீண்ட கூந்தல் அத்தகைய வெள்ளைத் தலையணையின் மீது கன்னங் கரேலென்று விழுந்து கிடந்ததை நோக்குகையில், பனிக்குன்றின் மீது கரிய மேகம் கிடப்பது போலிருந்தது. விசாலாட்சி விதவையாயினும் அவள் தலையை மொட்டை யடிக்கவில்லை. சாகும்பொழுது தன் தமையன் மனைவி "அடீ, விசாலாட்சீ! நீ எப்படியேனும் மறு விவாகம் செய்து கொள்" என்று சொல்லி விட்டுப் போன வார்த்தையில் அவளுக்கிருந்த நம்பிக்கையாலும், திடீரென்று பூகம்பமும் புயற்காற்றும் விளைவித்த, எதிர் பார்க்கப்படாத, கோர மரணப் பெருங்கோலத்தைக் கண்டும் பின் ஆவிபிழைத்ததனால் அவளுக்கேற்பட்ட பெரிய தைரியத்தாலும் அவள் தலைமயிர் வளர்க்கத் தொடங்கி விட்டாள்.