பக்கம் எண் :

விசாலாக்ஷிக்கு நேர்ந்த சங்கடங்கள்

உடனே அவர் விசாலாட்சியின் கையில் ஐந்நூறு ரூபாய் வெள்ளி நாணயங்களாக ஒரு பையில் கட்டிக் கொடுத்து, "இதைக் கொண்டுபோய், ரயில் செலவு போக மிஞ்சியதை அங்கு யாரேனும் ஸாஹூகார் கையில் வட்டிக்குக் கொடுத்து வட்டி வாங்கி ஜீவனம் செய்து கொண்டிரு. அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு. உனக்கு அப்போதப்போது என்னாலான உதவிகளைச் செய்துகொண்டு வருகிறேன். பயப்படாதே!" என்று சொல்லி மாமா இவளை யனுப்பி விட்டார். ஊராருடைய தூற்றல் பொறுக்க மாட்டாமையால் அவருக்கும் இவளை எப்படியேனும் அந்த ஊரை விட்டனுப்பி விடுவதில் சம்மதமாகவே யிருந்தது. அவளுடைய இஷ்டத்துக்கு விரோதமாக அவளை மொட்டையடித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவருக்கு மனமும் இல்லை. அவர் அப்படியே கட்டாயப்படுத்தி யிருந்தாலும் அவள் அதற்குக் கட்டுப்பட்டிருக்க மாட்டாள். அவள் கட்டுப்பட்டு மொட்டை யிட்டுக் கொண்டாலும் அதைப் பார்க்க அவருக்கு மனமிருந்திராது. அவருக்கு விசாலாட்சியின்மீது அத்தனை தூரம் பிரியம். அவளைத் தன் சொந்த மகள் போலவே கருதினார்.

எனவே, அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு விசாலாட்சி புறப்பட்டு வழிநெடுக ஸ்தல யாத்திரை செய்த சமயத்தில் அவளுடைய கற்பை யழிக்கவும், அவள் கையிலிருந்த பணத்தை அபகரித்துக் கொள்ளவும், அல்லது அவ் விரண்டு வகை பாதகச் செயல்களையும் கலந்து செய்யவும் பல ஆண்மக்கள் முயன்றனர். ஆனால் அவளை சாஸ்த் ரோக்தமாக விவாகம் செய்துகொண்டு அவளுடன் சதிபதியாக வாழக்கூடியவனாக அவளுக்கு எவனும் தென்படவில்லை. எனவே, முழுதும் ஆசாபங்கமுற்றவளாய், அதனால் ஒருவித முரட்டுத் தைரியம் அதிகப்பட்டுத்தான் இவள் ஜீ. சுப்பிரமணிய அய்யரிடத்திலும், அப்பால் வீரேசலிங்கம் பந்துலு விடத்திலும், இத்தனை பெருந் துணிவுடன் தனக்கு வரன் தேடிக் கொடுக்கும்படி வற்புறுத்தக் கூடியவளாயினாள். அப்பால், மேலே கதையை நடத்துவோம்.