பக்கம் எண் :

விடுதலை

காலையில் எழுந்து கைகால் சுத்தி செய்து கொண்டவுடனே தினந்தோரும் அவர் தங்கசாலைத் தெருவினின்றும் புறப்பட்டுச் சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரே கடற்கரையில் வந்து நெடுநேரம் உலாவி விட்டு சுமார் ஒன்பது மணிக்கு வீட்டுக்குத் திரும்புவார். வந்தவுடனே ஸ்நானம் பண்ணிவிட்டு போஜனம் செய்வார். பதினோரு மணி முதல் மாலை மூன்று மணிவரை தமது எழுத்து வேலை நடத்துவார். அப்பால் இடைப்பகல் சிற்றுண்டி யுண்டு.

தேயிலை நீர் குடிப்பார். அப்பால் ஒரு மணி நேரம் படிப்பிலும், மறுநாள் எழுதுவதற்கு வேண்டிய ஆலோசனைகளிலும் செலவிடுவார். அப்பால் தம்முடைய சிறு குதிரை வண்டியில் விசாலாட்சியையும் சந்திரிகையையும் ஏற்றிக்கொண்டு கடலோரத்தில் சவாரிவிடுவார். இரவு ஏழுமணி நேரத்துக்கு வீட்டுக்குத் திரும்புவார்கள். எட்டு மணி நேரமாகும்போது இராத்திரி போஜனம் தொடங்கும். அப்பால் விசாலாட்சியும் சர்மாவும் பேச்சிலும் விளையாட்டிலும் மன்மதக் கேளிகளிலும் பொழுது கழிப்பார்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு முன்பு அவர்கள் நித்திரை செய்யப் போவதே கிடையாது. என்ன தான் பேசுவார்களோ, ஏதுதான் பேசுவார்களோ கடவுளுக்குத்தான் தெரியும். ஒவ்வோரிரவும் இவ்விருவரும் பேசுவதும் சிரிப்பதும் பக்கத்து வீடுகளிலிருப்போருக்கெல்லாம் பெரும்பாலும் தூக்கம் வராதபடி செய்யும். ஒருவர் பேச்சு மற்றொருவருக்குத் தேனாய்த் திரட்டுப் பாகாய்க் கேட்கக் கேட்கத் தெவிட்டாமலிருக்கும். சில இரவுகளில் விசாலாட்சி ஹார்மோனியம் சுருதி போட்டுக்கொண்டு பாடுவாள். இவள் பாட்டின் அற்புதத்தில் மயங்கி வெறிகொண்டு விசுவநாத சர்மா தன்னை மறந்து எழுந்து குதிக்கத் தொடங்கிவிடுவார். சில சமயங்களில் இருவரும் கை கோத்துக்கொண்டு நாட்டியம் புரிவார்கள். வேலைக்காரக் கிழவியும் குழந்தையும் ஓரறைக்குள் படுத்துக் கொண்டு தூங்கிப்போய் விடுவார்கள். தோட்டத்திலிருந்த சிங்காரப் பரணில் இந்த தம்பதிகளின் களிகள் நடைபெறும்.