பக்கம் எண் :

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு

அதாவது, என் காது நரம்புகளையும் ஹிருதய நரம்புகளையும் அறுப்பதற்கு நீ நிஷ்கிருபையாகவும் இடையின்றியும் மறவாமலும் மீட்டு மீட்டு உபயோகித்து வரும் அஸ்திரங்களில் இந்த ஒற்றை அஸ்திரத்தின் பிரயோகத்தையேனும் இனி நிறுத்தி விடும்படி, நான் உன்னை மிகவும் தாழ்மையுடன் பிரார்த்தனை செய்கிறேன்" என்றார்.

"சரி. எனக்குத் தலை நோகிறது. நான் கீழே போய்க் காபி போட்டு சாப்பிடப் போகிறேன்" என்று சொல்லி முத்தம்மா எழுந்தாள்.

"காபி குடித்துவிட்டு இங்கு திரும்பி வருவாயா?" என்று சோமநாதய்யர் கேட்டார்.

"எதற்கு? இன்னும் ஏதேனும் அழுகைகளேனும் வசைகளேனும் மிச்ச மிருக்கின்றனவோ? நான் குரூர வார்த்தைகள் சொல்வதாக வருத்தப்படுகிறீர்களே? நீங்கள் என்னைப் பற்றி என்னிடம் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் அமிர்தமயமாக இருக்கின்றன என்றுதான் நினைத்திருக்கிறீர்களோ? சற்று நேரத்துக்கு முன் என்னுடன் கூடிவாழ்வதில் நீங்கள் அடையும் இன்பத்தை விஸ்தாரமாக வர்ணித்தீர்களே? அச்சொற்கள் என் செவிக்குத் தேவாமிர்தமாகத்தான் இருந்தன. கேட்கக் கேட்கத் தெவிட்டவில்லை. சரி, அது வீண் பேச்சு. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சிப் பயனில்லை. எத்தனை காலம் உங்களுடன் வாழும்படி பகவான் தலையில் எழுதியிருக்கிறானோ, அதுவரை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்கள் தங்களுடைய திருவாயினின்று பிறந்து கொண்டேதானிருக்கும். அவற்றை நான் சகித்துத்தான் தீரவேண்டும். எனக்கு நிவர்த்தியேது? நீங்களாவது என்னை விலக்கி வைத்துவிட்டு மற்றொருத்தியை விவாகம் செய்துகொண்டு சௌக்கியமாக வாழ்வீர்கள். நான் அப்படிச் செய்ய முடியுமா? எனக்கு வேறு புகலேது?" என்று முத்தம்மா சொன்னாள்.