இந்தப் பிள்ளையும் அவன் மனைவியாகிய வில்ரில்லாப்பா என்பவளும், அவனுடைய சிறிய தகப்பன், ஒரு கிழவன், அவன் பெயர் மூர்ச்சே போட்டான் சாஹிப் ஆகிய மேற்படி கிழவனுமாக இத்தனை பேர் அடங்கிய, பெரிய குடும்பத்தை அவன் புகையிலைக் கடை வைத்து சம்ரக்ஷணை செய்து வந்தான். இப்படியிருக்கையில் அந்தரடிச்சானுக்குத் தீராத வயிற்று வலி வந்தது. அத்துடன் கண்ணும் மங்கிவிட்டது. எட்டு யோஜனை தூரத்துக்கப்பால், ஒரு அதிர்வெடிச் சத்தம் கேட்டால் அவன் இங்கே பயந்து நடுங்கிப்போய், நூறு குட்டிக்கரணம் போடுவான். தலைக்குமேல் காக்கை பறக்கக் கண்டால், தெருவிலே போகையில் ஆந்தை கத்தினால், பூனை குறுக்கிட்டால், வண்டி எதிரே ஓடிவந்தால், சிப்பாயைக் கண்டால், இப்படி எவ்வித அபாயக்குறி நேரிட்டாலும் ஒவ்வொரு முறையும் நூறு நூறு குட்டிக்கரணம் போடுவது அவனுடைய வழக்கம். இங்ஙனம் தெருவில் போகுபோதும், வீட்டில் இருக்கும் நேரத்திலும் குட்டிகரணம் போட்டுப்போட்டு அவனை நெட்டைக் குத்தலாக நிறுத்துவதே கஷ்டமாய் விட்டது. ஒரு நாள் மேற்படி அந்தரடிச்சானிடம் அவனுடைய பிள்ளையாகிய செத்தான் சாஹிப் பின்வருமாறு சொல்லலானான்:- "பப்பாரே! சுத்தமாக ரஸ மில்லை. காசு கொண்ட காலையில் நம்கீ ரொட்டி ஜாஸ்தி. மீன் இல்லை. சாப்பாட்டுக்குக் கஷ்டம். நமக்கு எதுவும் கைகூடவில்லை. ஹிம் ஹீம் ஹூக்கும்! நீ ரொம்பக் கெட்டிக்காரன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். உம் ஹூம்! உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நாளை கேட்கிறேன். ஹிக்கீம்! ஹிக்கீம்; இப்போதே கேட்டு விடட்டுமா? ஹிக்கா ஹிக்கா! ஹம். ஹம். ஜீம். |