எனது ஞானத் தேரை நோக்கி "இந்த க்ஷணமே என்னை, துக்கமில்லாத பூமி எங்கேனும் உளதாயின், அங்கு கொண்டு போ" என்று ஏவினேன். ஆகா! இந்த ரதத்தை வைத்துக்கொண்டிருந்தும், இத்தனை நாள் எனக்குக் கவலையும், மன உளைச்சலும் இல்லாதிருக்க வழி தெரியாமல் போய்விட்டதே! எத்தனை நாள் எனது மனம் தூண்டிற் புழுவைப் போலத்துடித்துக் கொண்டிருக்க, அதை நிவிருத்தி செய்வதற்கு யாதொரு உபாயமும் அறியால் பரிதபித்திருக்கின்றேன். அம்மம்மா! இந்த உலகத்துக் கவலைகளை நினைக்கும்போதே நெஞ்சம் பகீரென்கிறது. அவற்றுக்குள்ள விஷ சக்தியை என்னென்பேன்? ஒருவனது முகத்திலுள்ள அழகையும், குளிர்ச்சியையும், இளமையையும் இந்தக் கவலைகளே அழித்து விடுகின்றன. கண்களின் ஒளியை மாற்றிப் பசலையும், உடல் நிறம் மங்குதலும் உண்டாக்கி விடுகின்றன. நெற்றியிலே வரிகளும், கன்னங்களிலே சுருங்கல்களும், இந்த நீசக் கவலைகளினாலேயே ஏற்படுகின்றன. எனது தொண்டையின் இனிய குரல் போய், கடூரமான கரகரப்புச் சத்தம் உண்டாகிறது. மார்பிலும், தோளிலும் இருந்த வலிமை நீங்கிப் போய்விடுகிறது. இரத்தம் விரைவாக ஓடுதலின்றி, மாசு நீரோடை போல மந்தம் அடைகின்றது. கால்களில் தீவிரமில்லாமற் போய்விடுகிறது. கவலைகள் என்ற விஷ ஜந்துக்கள் ஒருவனுடைய சரீரத்தை உள்ளூர அரித்து விடுகின்றன. சரீரத்தை மட்டுமா? அறிவையும் பாழாக்குகின்றன. மறதியை அதிகப்படுத்தி விடுகின்றன. முக்கியமான செய்திகளெல்லாம் நல்ல சந்தர்ப்பத்திலே நினைவிற்கு வராமல் போய் விடுகின்றன. படித்த படிப்பெல்லாம் பாலைவனத்திலே பெய்த மழைபோல நிஷ்பலனாய் விடுகின்றது. அறிவிலே பிரகாசமில்லாமல், எப்போதும் மேகம் படர்ந்தது போலாய்விடுகிறது. யோசனை தட்டுகிறது. ஐயோ! இந்தக் கவலைகளாகிய சிறிய சிறிய விஷப் பூச்சிகளுக்குள்ள திறமை வைத்திய சாஸ்திர நிபுணர்கள் கூறும் மகா கொடூரமான கண்ணுக்குத் தெரியாத - நோய்ப் பூச்சிகளுக்குக் கூடக் கிடையாது. |