"குமாரி! இப்படி யெல்லாம் சிரித்தால் பிறகு நீ எனக்கு இஷ்ட தேவதையில்லை. உன்னை முத்தமிடுவேன், பார்த்துக்கொள்" என்றேன். பர்வதகுமாரி முன்னிலும் இருமடங்கு நகைத்தாள். நானும் அவளைப் பயமுறுத்தியபடியே தண்டனை செய்தேன். அவள் சினந்தோன்றிய விழிகளோடு பார்த்தாள். "நான்தான் முதலிலேயே எச்சரித்தேனே. நீ ஏன் இரண்டாம் முறை சிரித்தாய்?" என்று வணக்கத்தோடு சொன்னேன். "நான் அதன் பொருட்டுக் கோபிக்கவில்லை. கந்தர்வ நாட்டு யுவதிகளை உண்மையான பக்தர்கள் இவ்வித தண்டனை செய்யும்போது கன்னத்தைத் தீண்டுவதில்லை. நீ...க...க..." என்று குழறிவிட்டாள். நான் கந்தர்வ விதிப்படியே அந்த அற்புதக் குற்றவாளியின் இதழிலே தண்டனை நிறைவேற்றினேன். கலீரென்று நகைத்து, "மூடத் தோழா! இதுதான் சித்திர சாலை" என்றாள். ஸ்தம்பிதனாகிவிட்டேன். "குமாரி, பரிகாசம் செய்கிறாய். இதுவா சித்திரசாலை!" "ஆம், இது எங்கள் சித்திரசாலையிலே பூர்வத்தில் ரமா நாதர் என்பவரால் அமைக்கப்பட்ட வனக்காட்சி. இதை வனமென்று நீ நினைத்தது பெரியதில்லை. எங்கள் உலகத்தார்களே இது இயற்கை வனமென்றும் செயற்கை வனமென்றும் தெரியாமல் அடிக்கடி ஏமாந்து போவதுண்டு" என்றாள். |