பக்கம் எண் :

அருவி

அப்பால் பிரதிமைகள் வைத்திருக்கும் மண்டபத்திற்குப் போனோம். ஒரு பக்கத்தில் ஜீவராசிகளின் வடிவங்கள் காணப்பட்டன. கண்ணுக்குத் தெரியாமல் பூதக்கண்ணாடியால் பார்ப்பதற்குரிய சிற்றுயிர்களைத் தவிர மற்றபடி அனேகமாக எல்லா ஜந்துக்களின் உருவங்களும் அங்கே யிருப்பது கண்டேன். எனக்கு ஜந்து நூலில் தக்க பயிற்சியும், அபிருசியும் இல்லை யாதலால், அக் காட்சியின் ரஸங்களைப் போதியபடி அனுபவிக்க முடியவில்லை. மற்றொரு புறத்திலே, கந்தர்வப் பிரதிமைகள் வகுப்புற்றிருந்தன. அங்கு, மிகுந்த ஆவலுடன் போனேன். பெண்ணிடத்தேனும், ஆணிடத்தேனும் சுந்தரமான வடிவம் காணப்படுமாயின், அதைப் போன்ற இனிய காட்சிகள் உலகத்திலே பல இல்லை. அசேதனப் பொருள்களிலே கூடச் சிறந்த அழகு தோன்றுமிடத்துக் கையெடுத்துக் கும்பிடத் தக்கதாக இருக்கின்றது. அவ்வாறிருக்க, ஓர் ஸ்திரீ அல்லது புருஷனுடைய முகத்திலே சைதன்ய ஒளியுடன் கலந்து அழகு தோன்றுமாயின், அது மிகவும் கவர்ச்சியுடையதாகு மென்பது சொல்லியாக வேண்டுமோ? மனுஷ்ய வடிவம் சௌந்தரியமா யிருப்பதைக் காண்பதில் எனக்கெப்போதுமே அளவிறந்த தாகமுண்டு, ஆனால், பூலோகத்தில் பரிபூரண சௌந்தரியமுடைய ஸ்திரீ புருஷர்கள் இல்லை. மனதினிடத்தே சுத்தமும் சாந்தியும் இல்லாதபடியால் பூமண்டலத்து மனிதர்கள் பொதுவாகப் பார்ப்பதற்கு விகாரமா யிருக்கிறார்கள், உள்ள நிலை உடலிலே தோன்றி விடுகிறதாதலின். அதிலும் நான் பிறந்த நாட்டிலே பஞ்சத்தாலும், நோயினாலும், அவற்றின் மூலமாகிய அடிமை நிலையாலும் ஆண்களும் பெண்களும் கண்ணால் பார்ப்பதற்குக் கூசும்படி அத்தனை குரூபிகளா யிருக்கிறார்கள். இது பாரத நாட்டிலே தற்காலத்தில் விதியாயிருக்கின்றது. இதற்கு விலக்குகள் உண்டென்பது சொல்லாதே அமையும்.] வல்லோர் தீட்டிய சித்திரங்களும், வல்லோர் செய்த பதுமைகளுமே பாரதவாசிகள் சௌந்தரியக் காட்சியை இழந்து விடாமல் காக்கின்றன. நமது புராதனக் கவிஞர் முதலாயினோரும் நமக்கு இவ் விஷயத்தில் துணை செய்கிறார்கள்.