பக்கம் எண் :

அருவி

சித்தரஞ்ஜனன் கொண்டு வைத்த கிண்ணங்களை நான் கையால் தொடவில்லை.

பர்வதகுமாரி திரும்பிப் பார்த்தாள்.

"எனக்கு வழக்கமில்லை" என்றேன்.

"இது மண்ணுலக மில்லை" என்றாள்.

"உங்கள் நாட்டுக் காற்றும், ஒளியும், குளிர்ச்சியும், காட்சிகளும் துணைக்கு நீயும் - இத்தனை வகைகள் போதாதா? இத்துடன் மது வேறு குடித்தா அறிவு மயங்க வேண்டும்?" என்று பலவாறு பேசிக் குமாரியின் வற்புறத்தலினால் மதுக் கிண்ணமொன்றை வெறுங்கிண்ணமாக்கினேன். இன்பக் களி நிலை பிறந்தது.

இன்பம் ஒரு ஜ்வரம். ஜ்வரத்திலே உஷ்ணம் ஓர் வரை கடந்து விட்டால் பிறகு குளிர்ச்சி தோன்றி ஜந்நி பிறந்து விடுவது போலவே, இன்பத்தின் முடிமீது துன்பமிருக்கின்றது. மேலே பலவாறாக வகுக்கப்பட்ட இன்பங்களும், பிறவும் கண்டேன். நாட்கள் பல கழிந்தன. இப்போது அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது ஒருவாறு அத்தனை நாட்களும் ஒரு கணம் போலவும், மற்றொரு வகையிலே அந்நாட்களின் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு இன்ப யுகம் போலவும் புலப்படுகின்றது.

நாட்கள் பல கழிந்தன. குமாரியும் எனது உயிர்த்தோழியாய் விட்டாள். நான் எக்காலத்தும் கனவிலே கூடக் கண்டிராத உள்ளக் கிளர்ச்சியும், சோர்வு, நோய், மனத்தளர்ச்சி, மனத்துயர் என்பற்றின் முழுமறதியும் ஏற்பட்டன. எனினும், மனது திருப்தி பெறவில்லை. ஏதோ ஒன்று குறைவாயிருப்பது போலவே தோன்றியது. நாளடைவில் கந்தர்வ நாட்டின்பங்கள் கூட, கைத்துப் போகவில்லை. ஆனால் சாதாரணமாய்ப் போய்விட்டன. ஆரம்பத்திலிருந்தே பரவச நிலைக்கிடமில்லை. கடல், நிலா முதலிய இயற்கை அழகுகளிலே எப்போதும் லயித்தாலும் பரவசந் தோன்றுமெனினும், கள்ள மனம் அவற்றில் நிலைத்திருக்க வன்மையிலதாகி நின்றது. ஆ! குமாரியினிடத்திலே கூட மனம் தொடக்கத்திலே கொண்ட பற்றை நெகிழ்ந்து விட்டது.