பக்கம் எண் :

அருவி

ஒரு நாட்காலையில் நான் தனியே உட்கார்ந்துகொண்டு பின்வருமாறு யோசிக்கலாயினேன்: "ஆகா! இன்பக் களஞ்சியமாகிய இந்நாட்டிற்கு வந்துங் கூட நமது மனதிற்குத் திருப்தி விளையவில்லையே. இந்த கந்தர்வ நாட்டிலுள்ளவர்கள் ஒரு நாளைப் போலவே அனுதினம் செய்ததைச் திரும்பச் செய்துகொண்டு மகிழ்ந்த முகத்துடனே சுகத்தில் வாழ்கிறார்கள். இவர்களுக்கு இதில் அதிருப்தி ஏற்பட்டதாகத் தோன்றவில்லை. நமக்கு மட்டிலுந்தான் எம்மருந்துக்கும் தீராத மனநோய் பிறந்திருக்கிறது. இதென்ன ஆச்சரியம்!"

நான் இங்ஙனம் சிந்தனை செய்துகொண்டிருக்கையில் குமாரி எங்கிருந்தோ பறந்து வந்து என்னருகே தழுவி வீற்றிருந்தாள். பின், வழக்கம்போலவே எனது உள்ளக் கருத்தை எளிதில் தெரிந்துகொண்டவளாகி எனக்குச் சில அரிய உண்மைகள் கூறுவாளாயினள்.

"தோழா! எங்கள் உலகத்தார் செய்கைகளிலே புதுமையில்லையென்று நீ வியப்படைகிறாய். மண்ணுலகத்தார் வாழ்க்கையை மறந்துவிட்டாயா? அதில் ஏதேனும் புதுமையுண்டா? மனித மிருகங்களிலே பாக்கியம் பெற்ற சில மிருகங்கள் வாலிபத்திலேயே இறந்து விடுகின்றன. சில எண்பது தொண்ணூறு நூறு வருஷங்கள் வரை வாழ்கின்றன. எட்டா மாதத்திலே தின்னத் தொடங்கிய சோற்றை எண்பதாம் ஆண்டிற் கூட சாதாரணமாகக் கருதுகிறானில்லை. மானுடா, உங்கள் உலகத்திலே வாழ்வோர் சோற்றுக்கும் ஆடைக்குமாகப் பொய் பேசுகிறார்கள்; வஞ்சனை செய்கிறார்கள்; நடிக்கிறார்கள்; ஏமாற்றுகிறார்கள்; திருடுகிறார்கள்; ஹிம்ஸைகள் செய்கிறார்கள்; கொலை புரிகிறார்கள்; உடலை விற்கிறார்கள்; அறிவை விற்கிறார்கள்; அடிமைகளாகி ஆத்மாவை விற்கிறார்கள்; மானுடா, உங்கள் உலகத்திலே ஏழைகளாயிருப்போர் பெரும்பாலும் மானமற்ற அடிமைகள்.