பக்கம் எண் :

அருவி

அவர்கள் அற்ப சுகத்தின் பொருட்டு எது வேண்டுமாயினும் செய்வார்கள். செல்வராயிருப்போரில் பெரும்பாலார் திருடர்கள். உங்கள் உலகத்திலே எளியோராயிருப்போர் வெறுத்தற் குரிய நீச குணமுடையார். வலியோராயிருப்போர் காலால் மிதித்து நசுக்குதற்குரிய தீக்குணமுடையார். அவர்களெல்லாம் செய்ததைச் செய்ததைச்த் திருப்பிச் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள்? உண்டும், உறங்கியும், நடித்தும் சாகிறார்கள். எங்கள் உலகத்திலே மரணமில்லை, பொய்யில்லை. மேலும் தீய நடிப்பு, நீசப்பாசாங்கு, வேஷம் போடுதல், ஒன்று நினைத்து வேறொன்று பேசுதல் - இந்த மகாபாதகக் குணமில்லை. இவற்றால் விளையக்கூடிய துன்பங்கள் அனைத்துமில்லை. ஆயினும், உனக்கு எங்கள் வாழ்க்கையிலே திருப்தியுண்டாகாம லிருப்பது ஓர் குற்றமன்று. ஏனென்றால், மானுட ஜன்மம் எவ்வளவு இழிவுகளுடையதாயினும் ஒரு முக்கியமான விஷயத்திலே எங்கள் பிறப்பைக் காட்டிலும் சிறந்தது. ஆத்மத் தேட்டத்திற்கு மனிதப் பிறவி மிகவும் சௌகரியமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. 'திருப்தி எதிலும் ஏற்படாதிருத்தல்' - இந்த ஒரு குணமே மனிதப் பிறவிக்குக் காப்பாகவும், அதன் பெருஞ் சிறப்பாகவும் விளங்குகின்றது. மாயா சம்பந்தமான எந்த நிலையிலும் மனிதன் ஸ்திரமின்மை கண்டு அதிருப்தியடைகின்றான். உங்களிலே பெரும்பான்மையோர் அறிவைப் பலவாறு குழப்பிக்கொண்டு உண்மை நினைப்பே யின்றிப் புழுக்கள் போல மடிவது மெய்யே யாயினும், ஒரு சிலர் பரமநிலை கண்டு விடுகிறார்கள். தேவர்கள் கூட மோக்ஷமடைய வேண்டுமாயின் மனித ஜன்மமெடுத்துத் தீரவேண்டுமென்று நீ கேள்விப்பட்டிருக்கலாம், அது மெய்யே. உங்கள் உலகத்துச் சங்கரன், சுகன், ஜனகன், கிருஷ்ணன், புத்தன், இயேசு முதலியவர்களைப்போன்ற அற்புதப் பெரியோர் எங்கள் நாட்டிலே தோன்றுவது சாத்தியமில்லை. மாயை விலங்கு; அதில் எங்களுக்குப் பொன்விலங்கு பூட்டியிருப்பதால் வெறுப்புண்டாவது எளிதன்று. உங்களுக்குக் கோரமான தளைகள் போட்டிருப்பதால் மேலோர் எளிதாக வெறுப்படைந்து விடுகிறார்கள்.