பக்கம் எண் :

கத்திச் சண்டை

எனக்கு மலையாளம் அர்த்தமாகாத படியால் நான் அவர்களுடைய சம்பாஷணையைக் கவனிக்க வில்லை. குள்ளச்சாமியாரை நான் குருவென்று நம்பியிருக்கிறபடியால் அவருக்கும் கடையிலிருந்து வாழைப்பழம், வாங்கிக் கொண்டு வந்து பாலும் பழமும் கொடுத்தேன். இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்தார்கள். கீழ்த் தளத்தில் சாப்பிட்டார்கள். பிறகு நான் வெற்றிலைத் தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு மேல்மாடியில் பூஜா மண்டபத்துக்குப் போகலாம் என்று கூறி அழைத்து வந்தேன். இருவரும் மேல் மாடிக்கு வந்தார்கள். நான் ஊஞ்சலின் மீது அவர்கள் இருவரையும் வீற்றிருக்கும்படி செய்து தாம்பூலம் கொடுத்தேன். இருவரும் தாம்பூலம் போட்டுக் கொண்டார்கள். பிறகு ஒரு க்ஷணத்துக்குள்ளே நெட்டை மாடன் வெளி முற்றத்திலிருந்து ஒரு நாற்காலி யெடுத்துக் கொண்டுவந்தான்.

அதன் மேலே ஏறிக்கொண்டு ஊஞ்சல் சங்கிலிகளைக் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் கழற்றினான். அடுத்த க்ஷணத்துக்குள் ஊஞ்சலையும் சங்கிலிகளையும் கொண்டு சுவரோரத்தில் போட்டு விட்டான். பிறகு நெட்டை மாடன் என்னை நோக்கி "எனக்குச் சமானமாகக் கத்தி வீசத் தெரிந்தவர் இந்த ஊரில் ஒருவர் தானுண்டு என்று சொன்னேனே. அவர் யாரெனில் இந்தச் சாமியார் தான்" என்று குள்ளச் சாமியாரைக் காட்டினான். நான் ஆச்சரியத்தால் ஸ்தம்பிதனாய் விட்டேன்.

ஒரு க்ஷணத்துக்குள் அந்த இருவரும் தலைக்கொரு கத்தியாக எடுத்துக் கொண்டு வீசத் தொடங்கி விட்டார்கள். நெடுநேரம் அவர்களுக்குள்ளே கத்திச் சண்டை நடந்தது. அதைப் பார்த்து நான் பிரமித்துப்போய் விட்டேன். அத்தனை ஆச்சரியமாக அவ்விருவரும் கத்தி சுழற்றினார்கள். ஒருவருக்கும் காயமில்லை. ஆனால் நடுவே நடுவே இவன் தலை போய் விடுமோ அவர் தலை போய் விடுமோ என்று எனது நெஞ்சு படக்குப் படக்கென்று புடைத்துக் கொண்டிருந்தது.