பக்கம் எண் :

குழந்தைக் கதை

செட்டிச்சி வந்து குனிந்து கூடைமீதுள்ள துணியை விலக்கினாள். "தொடாதே யம்மா" என்று வெல்ல வியாபாரி கத்தினான். அதற்குள் வேறு சில செட்டிச்சிகளும் வந்து கூடி விட்டனர்.

     சத்தம் அதிகப்பட்டது. பலவிதமாக விலை பேசலாயினர். "பணத்துக்கு எத்தனை கட்டி? இன்னும் இரண்டு போடு......அட, போ, மூன்று காசுக்குப் பால் மாறாதே......அடீ, நீவாடீ, நாம் கடைத் தெருவில் போய் வாங்கிக் கொள்ளலாம்" என்று நானாவிதமான சம்பாஷணைகள் நிகழ்ந்தன. வியாபாரம் நடக்கவில்லை. ஸ்திரீகளின் கூட்டம் அதிகப்பட்டவுடனே, முதலியார் அங்கிருந்து சற்றே விலகிக் கொண்டார். அப்போது அந்த முதலியாருடைய நண்பராகிய ஒரு கிழவர் அங்கு வந்து சேர்ந்தார். அவ்விருவரும் சம்பாஷணை செய்யலாயினர்.

     நான் அந்த வீதியில் ஒரு வேலையாகப் போயிருந்தேன். ஒரு மனிதருக்காகக் காத்திருக்கும்படி நேரிட்டது. அக் குழந்தை தையல் வேலை செய்து கொண்டிருந்த வீட்டுக்குக் கீழே ரஸ்தாவில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

     அப்போது அந்த முதலியார் சொன்னார்: "வெல்லம் விலை விஷம் போலேறி விட்டது. அட, வெல்லம் மாத்திரமா, பெருங்காயம் முதல் பலாப்பழம் வரை; உப்பைத் தொட்டுக் கற்பூரம் வரை எல்லாச் சாமான்களுக்குந் தான் விலை ஒரேயடியாகப் பின்னுக்கேறி விட்டது. தெருவிலே கீரை கொத்தமல்லி கொண்டு வரும் கிழவிகூடப் போன வருஷத்துக்கு இவ்வருஷம் மூன்று மடங்கு சாமான் குறைவாகப் போடுகிறாள். இந்தக் குட்டிச் சுவராக, மண்ணாகப் பாழாகிப் போகிற ஜெர்மனிக்காரன் எப்போது தான் சண்டையை நிறுத்துவானோ?" என்று முதலியார் பெரு மூச்சு விட்டார்.