பக்கம் எண் :

குழந்தைக் கதை

இடுப்பில் நிஜார். உடம்பின் மீது தழையத் தழைய ஒரு மஸ்லின் உடுப்பு. நெஞ்சு வரை தாடி தொங்குகிறது. ஜெர்மனி தேசத்து கெய்ஸர் மாதிரி மீசை வைத்துக் கொண்டிருந்தான். பச்சைப் பட்டுத் துணியொன்றைத் தலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

'குழந்தையைப் பார்த்தால் பிராமணக் குழந்தை போலிருக்கிறது. இவனைப் பார்த்தால் பச்சைப் பட்டாணித் துருக்கனைப் போலிருக்கிறது. இதென்னடா ஆச்சரியம்' என்று நான் சற்றே திகைப்பெய்தி நின்றேன். அப்போது அக் குழந்தை அவனிடம் என்னைச் சுட்டிக்காட்டி "இவர் தானப்பா, நூலை யெடுத்துக் கொண்டு தரமாட்டே னென்கிறார்" என்று சொல்லி அட்டஹாஸம் பண்ணிற்று. அதனின்றும் அக் குழந்தையின் பிதா, வந்த மனிதன் என்று தெரிந்து கொண்டேன்.

நூலைக் குழந்தை கையிலே கொடுத்துவிட்டேன். அது நூலை வாங்கிக் கொண்டு மறுபடி மெத்தைக்கு ஏறிப்போய், வீதியெதிரே நாற்காலியின் மீதிருந்து கொண்டு மீளவும் தையல் வேலை தொடங்கி விட்டது.

அந்த மனிதனுக்கு நான் என்னை அறியாமலே, மகமதிய ரீதியில் ஸலாம் பண்ணினேன். அவனும் சுத்தமான அரபி பாஷையில், "ஆலேகும் ஸ்லாம்" என்றான். எனக்குக் கால்கள் ஸ்தம்பித்துப் போயின. கடைசி வரை இந்த ஆள் துருக்கன் தானோ என்ன இழவோ? அப்படியானால், தெளிந்த பாண்டித் தமிழ் பேசும் மேற்படி பிராமணக் குழந்தை இவனை 'அப்பா' என்று கூப்பிட நியாயமில்லையே, இதென்ன விரோதம்! என்று யோசிக்கலானேன். இதனிடையே அந்த மனிதன் என்னை சம்பாஷணைக் கிழுத்தான்.

சிரித்துக் கொண்டே பேசுகிறான்: "வாருங்கள்; ஹெ, ஹெ, ஹெ, ஹெ. அந்தக் குழந்தையுடன் நூலுக்காகச் சண்டையா போட்டீர்கள்? இப்படி வாருங்கள்.