பக்கம் எண் :

கவலையற்ற பூமி

எனக்கு இந்த மனம் என்ற மோகினியிடத்தில் காதல் அதிகமுண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோகம் உண்டாயிற்று என்பதை இங்கே விஸ்தரிக்க முடியாது. அது ரகஸ்யம். ஆனால், நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்து போகும் வண்ணமாக எனக்கு இம் மோகினியிடத்தில் பிரேமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும் பாடுகளைக் கண்டு பொறுக்காமலேதான் நான் சாந்திலோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் நிஷ்காரணமாக வெறுப்புக் கொள்வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமாதானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண் மூடிக்கொண்டு ஒரேயடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு, ஒரே நிச்சயத்துடன், "மனமே, நான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக்கேட்கவே மாட்டேன். உன்னுடைய நான்மையைக் கருதியே நான் செய்கிறேன். - ஞானரதமே, - உடனே புறப்படு" என்றேன்.

அடுத்த நிமிஷத்தில் உபசாந்தி பூமிக்கு வந்து சேர்ந்தோம்.