பக்கம் எண் :

ஞானரதம் - மண்ணுலகம்

எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துக்களுக்கப்பால், ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூலி கொடுத்து வாசம் செய்துகொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் அந்த வீட்டைக் கொஞ்சம் வர்ணிக்கலாமா? கந்தர்வ நாட்டைப் பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணுலகத்தில் நமக்குள்ள சௌகரியங்களைப் பற்றிச் சிறிது கேளுங்கள்.

நானிருந்த வீட்டிற்கு முன்பக்கத்திலே ஓர் கூடமும் அதைச் சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்கே பார்த்த வீடு. அந்தக் கூடத்திற்குத் தென்புறத்திலே ஒரு முற்றம். இது முன் பகுதி; பின் பகுதியிலே சில அறைகள். ஒரு முற்றம். மேல் மெத்தை. அதில் இரண்டறைகள். இவ்விரண்டு பகுதிகளுக்குப் பொதுவாகத் தென்பாரிசத்திலே கொல்லைப் புறத்தில் ஓர் கிணறும் தண்ணீர்க் குழாயும் உண்டு. பின் பகுதியில் நான், என் சிறிய தாயார், மனைவி, மைத்துனிப் பெண், தம்பி, எனது குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார். அவருக்குப் பகல் முழுதும் உழைத்துக் கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ, ஓர் உத்தியோகம். உடம்பிலே கோபிமண் முத்திரைகள் எத்தனையோ அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்.