பக்கம் எண் :

தர்மலோகம்

சில தினங்களுக்கப்பால், ஒரு சமயம் என்னைத் தனியே விட்டுவிட்டுத் தபோமுனி ஏதோ வேலையாகப் போயிருந்தார். பிராரப்த கர்மப் பயன்! நான் தனியேயிருக்கும்போது நீசமனம் இலேசாகப் பர்வதகுமாரியின் உருவத்தைக் கொண்டு எதிரே நிறுத்தியது. 'ஆ! என்ன இன்பமாயிருந்தது அந்தக் காலம்!' என்று நினைத்தேன்.

எதிரே நின்ற மோகன விக்கிரகம் இன்னும் - சிறிது நெருங்கிற்று. நான் அதைத் தழுவும் பொருட்டாக எழுந்தேன். எனது கைகளுக்கிடையே மின் வெட்டு முன் பர்வதகுமாரி வந்து நின்றாள். இதழ்களோடு இதழ் பொருத்தி ஒரு க்ஷணம் மோக பரவசத்திலே இருந்தேன். இரண்டு மூன்று பூமிகள் இடிந்து விழுந்ததுபோலப் "படேர்" என்று ஒரு சப்தம் கேட்டது. "கோ" என்றலறி மூர்ச்சை போட்டு விழுந்தேன்.

கண்ணை விழித்துப் பார்க்கும்போது பழைய திருவல்லிக் கேணியில் பழைய இடத்திலே என்னைச் சுற்றிச் சிலர் விசிறிக் கொண்டு நிற்பதைக் கண்டேன். "என்ன செய்கிறீர்கள்" என்று கேட்டதற்கு, "நீ பேய்கண்டவன்போல அலறினாய். நாங்கள் வந்து பார்க்கும்போது மூச்சில்லாமலிருந்தது. பலவிதமான சைத்யோபசாரங்கள் செய்தபிறகு இப்போது மூச்சு விடுகிறாய்" என்றார்கள்.

"ஐயோ, மூச்சுப் போயிருந்தாலும் பெரிய காரியமில்லையே, தர்மத்தைத் தவறிவிட்டேனே!" என்று கூறிக் கண்ணீர் சிந்தினேன்.