பக்கம் எண் :

மாணிக்கஞ் செட்டி மானி அய்யனை நகைத்தது

அதற்குப் பார்ப்பான்: "செட்டியாரே, அவசியமாக இருந்தால் தாங்கள் சொல்லியனுப்பவேண்டும். நானாக வர சௌகர்யப்படாது" என்றான். செட்டி கடகடவென்று நகைத்தான். பிறகு சொல்லுகிறான்: "ஐயரே, கொஞ்சம் இலேசாக அடக்கும். நமக்குப் பார்ப்பார் கிடைப்பது கஷ்டமில்லை காணும். உமக்குச் செட்டி கிடைப்பது கஷ்டம்" என்றான்.

"ஐயரே, போய் வாரும்" என்று செட்டி சொன்னான். இவன் சரியென்று வீட்டுக்கு வந்துவிட்டான். நாள் இரண்டாயின. மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு பெரிய சங்கடம் வந்து சேர்ந்தது. அவனுக்கு ஒரு மைத்துனன். அந்த மைத்துனன் பெயர் தட்டிக் கொண்டான் செட்டி. இவனை மாணிக்கஞ் செட்டி தனது காரியஸ்தனாகத் தஞ்சாவூரிலே வைத்திருந்தான். தஞ்சாவூரில் மாணிக்கஞ் செட்டிக்கு ஒரு கடையும் கொஞ்சம் கொடுக்கல் வாங்கலும் உண்டு. தட்டிக் கொண்டான் செட்டி நஷ்டக் கணக்குக் காட்டுவதிலே புலி. ஒரே அடியாகப் பெரிய தொகையை அழுத்திக்கொண்டு கணக்குக் காட்டிவிட்டான். அந்த நஷ்டக் கணக்கு மாணிக்கஞ் செட்டிக்கு வந்தது. ஓலையை விரித்து வாசித்துப் பார்த்தான். வயிறு பகீரென்றது.

"கெடுத்தானே பாவி! கெடுத்துப் போட்டானே! இனி என்ன செய்யப் போகிறோம்? என்று மிகவும் துன்பப்பட்டான்.

ஆனாலும், ஒருவாறு மனதைத் தேற்றிக்கொண்டு மேலே நடக்க வேண்டிய காரியத்தைப் பார்ப்போமென்று சொல்லி, "இப்போது தஞ்சாவூருக்கு அனுப்ப ஒரு தகுதியான மனுஷன் வேண்டுமே. யாரை அனுப்புவோம்? என்று யோசித்தான். மானி அய்யருடைய ஞாபகம் வந்தது. "அவனைக் கூப்பிடுவோம்? என்று தீர்மானம் செய்துகொண்டு ஒரு ஆள் அனுப்பினான். மானி அய்யன் வந்து சேர்ந்தான்.