பக்கம் எண் :

சமூகம் - ஆசாரத் திருத்த மஹாசபை

இப்போது நடைபெறும் 1920-ம் வருஷம் ஜூன் மாஸம் 22-ம் தேதியன்று தொடங்கி, அன்றைக்கும், அடுத்த இரண்டு மூன்று தினங்களும் திருநெல்வேலியில் "மாகாணஆசாரத் திருத்த மஹாஸபை" நடைபெறும் என்று தெரிகிறது.21-ந் தேதியன்று மாகாணத்து ராஜரீக மஹாஸபை திருநெல்வேலியில் கூடுகிறது. அதை அனுசரித்து, அதே பந்தரில் ஆசார ஸபையும் நடக்கும்.

22-ந் தேதி முதல், இரண்டு மூன்று நாள் கூடி, அங்கு நம் மாகாணத்து ஆசாரத்திருத்தக்காரர் வழக்கப்படிவிவாதங்கள் நடத்தி மாமூலைத் தழுவி சில தீர்மானங்களைச்செய்து முடித்துப் பின்பு கலைந்து விடுவார்கள்.

எனக்குக் கிடைத்திருக்கும் அழைப்புக் கடிதத்தைப்பார்க்குமிடத்தே இந்த வருஷம் நடப்பது இருபத்திரண்டாவதுவருஷக் கூட்டமென்று விளங்குகிறது. சென்ற இருபத்திரண்டுவருடங்களாக இம் மாகாணத்திலுள்ள ஆசாரத் திருத்தக் கூட்டத்தார் வெறுமே ஸபைகள் கூடித் தீர்மானங்கள் செய்திருப்பதே யன்றி உறுதியான வேலை என்ன செய்திருக்கிறார்கள் என்பதை அறிய வழியில்லை.

ராஜரீக மஹா சபையில் செய்யப்படும் தீர்மானங்கள்காரியத்துக்கு வராவிட்டால், "அதற்கு நாம் என்ன செய்யலாம்?அதிகாரிகள் பார்த்து வரங்கொடுத்தால் தானே உண்டு. நாம் கேட்கமாத்திரமே தகுதியுடையோர். நம்முடைய விருப்பங்கள் நிறைவேறவேண்டுமாயின், அதற்கு அதிகாரிகளின் தயவு வேண்டும்; அல்லது,இங்கிலீஷ் பார்லிமெண்டின் தயவு வேண்டும். அவை நிறைவேறாமலிருப்பது பற்றி நம் மீது குறை கூறுதல் பொருந்தாது" என்றுசாக்குப்போக்குச் சொல்ல இடமிருக்கிறது.

ஆசாரத் திருத்த மஹா சபையின் விஷயமோ அப்படியில்லை. இதில் நம்மவர்கள் செய்யும் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டியவர்களும் நம்மவரே யன்றிப்பிறரில்லை. அதிகாரிகளின் தயவு வேண்டியதில்லை. இங்கிலீஷ் பார்லிமெண்டின் கருணையும் "அவசியமில்லை. இதில் நாமே வரங்கேட்டு, நாமே வரங்கொடுக்க வேண்டும். அப்படியிருந்தும், இந்த ஆசாரத் திருத்தச் கூட்டத்தாரின் முயற்சிகள் ராஜ்யத் திருத்தக் கூட்டத்தாரின் பிரயத்தனங்களைக் காட்டிலுங்கூடக்குறைவான பயன் எய்தியிருப்பதை நோக்கும் போது மிகவும் வருத்தமுண்டாகிறது.

இந்த தேசத்து ஜனத்தலைவர்கள் மனிதர்களா? அல்லது வெறும் தோல் பொம்மைகள்தானா? இவர்கள் மனித ஹ்ருதயத்தின் ஆவலையும், மனித அறிவின் நிச்சயத்தையும்அவற்றின் பெருமைக்குத் தக்கபடி மதிப்பிடுகிறார்களா? அல்லதுவெறும் புகையொத்த பதார்த்தங்களாகக் கணிக்கிறார்களா?